இறை வணக்கம்
உலகம் யாவையும்தாம் உள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.
படைத்தலும், காத்தலும், அழித்தலும் இறைவனுக்குத் தொடர்ந்த விளையாட்டுகளாகும். அவர் எம் தலைவர் ஆவார். அன்னவர்க்கே நாங்கள் அடைக்கலம். இறைவன் எம்மைக் காப்பானாக.
கம்பர் வடமொழிக் காவியத்தைத் தென் தமிழ் மொழியில் கவிதைச் சொற்களைக் கொண்டு காவியம் படைத்துத்தந்திருக்கிறார். கம்பர் காவியத்துக்கே அவர் எடுத்தாளும் சொற்கள் தனிச் சிறப்பைத் தருகின்றன.
“செஞ் சொற் கவி இன்பம்” அவர் ஊட்டியது. அவ்வின்பம் சிறிதும் குறையாது உரைநடையில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
கம்ப ராமாயணக் கதை மட்டும் எடுத்துக் கூறுவது இவ்வுரைநடை நூல். கதைக் கோவை கெடாமல் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கிறது இந்நூல்; உரைநடை இதற்குத் தனிச்சிறப்புத் தருகிறது.
சில பதிப்புகளைக் கண்ட இந்நூல் அழகாக அச்சிடப்பட வேண்டும் என்ற முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒளி அச்சில் தக்கதாளில் இந்நூல் வெளிவருகிறது.
இந்நூல் தரம் மிக்கதாக அமைய எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
எம் வெளியீடுகள் சில இலக்கியப் பின்புலம் கொண்டவை; அவை நிலைபேறு பெறத்தக்கவை என்பதால் மறுபதிப்புக் காண்கின்றன.ரா.சீனிவாசன்