ஔவையார்
கொன்றை வேந்தன்
கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
உயிர் வருக்கம்
- அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
- இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
- ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
- உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
- ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
- எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
- ஏவா மக்கள் மூவா மருந்து.
- ஐயம் புகினும் செய்வன செய்.
- ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
- ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
- ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
- அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.
ககர வருக்கம்
- கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.
- காவல்தானே பாவையர்க்கு அழகு.
- கிட்டாதாயின் வெட்டென மற.
- கீழோர் ஆயினும் தாழ உரை.
- குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
- கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
- கெடுவது செய்யின் விடுவது கருமம்.
- கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
- கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
- கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.
- கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
- கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.
சகர வருக்கம்
- சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
- சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
- சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
- சீரைத் தேடின் ஏரைத் தேடு.
- சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
- சூதும் வாதும் வேதனை செய்யும்.
- செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
- சேமம் புகினும் யாமத்து உறங்கு.
- சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.
- சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
- சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.
தகர வருக்கம்
- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
- தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
- திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
- தீராக் கோபம் போராய் முடியும்.
- துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
- தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
- தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.
- தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
- தையும் மாசியும் வையகத்து உறங்கு.
- தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
- தோழனோடும் ஏழைமை பேசேல்.
நகர வருக்கம்
- நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
- நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
- நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.
- நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
- நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
- நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
- நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
- நேரா நோன்பு சீராகாது.
- நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
- நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
- நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.
பகர வருக்கம்
- பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
- பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
- பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
- பீரம் பேணி பாரம் தாங்கும்.
- புலையும் கொலையும் களவும் தவிர்.
- பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
- பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
- பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
- பையச் சென்றால் வையம் தாங்கும்.
- பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
- போனகம் என்பது தான் உழந்து உண்டல்.
மகர வருக்கம்
- மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
- மாரி அல்லது காரியம் இல்லை.
- மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
- மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
- முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
- மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
- மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
- மேழிச் செல்வம் கோழை படாது.
- மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.
- மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
- மோனம் என்பது ஞான வரம்பு.
வகர வருக்கம்
- வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
- வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
- விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
- வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.
- உரவோர் என்கை இரவாது இருத்தல்.
- ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
- வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
- வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
- வைகல் தோறும் தெய்வம் தொழு.
- ஒத்த இடத்து நித்திரை கொள்.
- ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்