Thirukkural – Porutpal

பொருட்பால்


CONTENTS


அரசியல்
இறைமாட்சி
கல்வி
கல்லாமை
கேள்வி
அறிவுடைமை
குற்றங்கடிதல்
பெரியாரைத் துணைக்கோடல்
சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை
வலியறிதல்
காலமறிதல்
இடனறிதல்
தெரிந்துதெளிதல்
தெரிந்துவினையாடல்
சுற்றந்தழால்
பொச்சாவாமை
செங்கோன்மை
கொடுங்கோன்மை
வெருவந்தசெய்யாமை
கண்ணோட்டம்
ஒற்றாடல்
ஊக்கமுடைமை
மடியின்மை
ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை
அங்கவியல்
அமைச்சு
சொல்வன்மை
வினைத்தூய்மை
வினைத்திட்பம்
வினைசெயல்வகை
தூது
மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல்
அவையறிதல்
அவையஞ்சாமை
அங்கவியல்
நாடு
அரண்
பொருள்செயல்வகை
படைமாட்சி
படைச்செருக்கு
நட்பு
நட்பாராய்தல்
பழைமை
தீ நட்பு
கூடா நட்பு
பேதைமை
புல்லறிவாண்மை
இகல்
பகைமாட்சி
பகைத்திறந்தெரிதல்
உட்பகை
பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல்
வரைவின்மகளிர்
கள்ளுண்ணாமை
சூது
மருந்து
ஒழிபியல்
குடிமை
மானம்
பெருமை
சான்றாண்மை
பண்புடைமை
நன்றியில்செல்வம்
நாணுடைமை
குடிசெயல்வகை
உழவு
நல்குரவு
இரவு
இரவச்சம்
கயமை
அரசியல் இறைமாட்சி
381.படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

382.அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

383.தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

384.அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

385.இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

386.காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

387.இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

388.முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

389.செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

390.கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

கல்வி
391.கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

392.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

393கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

394.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

395.உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
396.தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

397.யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

398.ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

399.தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

400.கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

கல்லாமை
401.அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

402.கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

403.கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

404.கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

405.கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

406.உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

407.நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

408.நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

409.மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

410.விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

கேள்வி
411.செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

412.செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

413.செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

414.கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

415.இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

416.எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

417.பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

418.கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

419.நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

420.செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்ன?.

அறிவுடைமை
421.அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

422.சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

423.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

424.எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

425.உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.

426.எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.

427.அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

428.அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

429.எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

430.அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

குற்றங்கடிதல்

  1. செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
    பெருக்கம் பெருமித நீர்த்து.

432.இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

433.தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

434.குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை.

435.வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

436.தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?.

437.செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

438.பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.

439.வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

440.காதல் காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

பெரியாரைத் துணைக்கோடல்
441.அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

442.உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

443.அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

444.தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

445.சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

446.தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

447.இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

448.இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

449.முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

450.பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

சிற்றினஞ்சேராமை
451.சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

452.நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

453.மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.

454.மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.

455மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.

456.மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

457.மனநலம் மன்னுயிர்க் காக்கம் இன நலம்
எல்லாப் புகழும் தரும்.

458.மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப் புடைத்து.

459.மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.

460.நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

தெரிந்துசெயல்வகை
461.அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

462.தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

463ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

464.தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.

465.வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

466.செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

467.எண்ணித் துணிக கருமம் துணிந்தபின
எண்ணுவம் என்பது இழுக்கு.

468.ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

469.நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

470.எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

வலியறிதல்

  1. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணைவலியும் தூக்கிச் செயல்.
  2. ஒல்வ தறிவது அறிந்ததன் கண் தங்கிச்
    செல்வார்க்குச் செல்லாதது இல்.
  3. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
    இடைக்கண் முரிந்தார் பலர்.

474, அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

  1. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
    சால மிகுத்துப் பெயின்.
  2. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
    உயிர்க்கிறுதி ஆகி விடும்.
  3. ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
    போற்றி வழங்கு நெறி.
  4. ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
    போகாறு அகலாக் கடை.

479.அளவறநேது வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

  1. உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
    வளவரை வல்லைக் கெடும்.

காலமறிதல்
481.பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

482.பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

483.அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.

484.ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

485.காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

486.ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

487.பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம் பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

488.செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

489.எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

490.கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

இடனறிதல்

  1. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
    இடங்கண்ட பின்அல் லது.
  2. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
    ஆக்கம் பலவுந் தரும்.
  3. ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
    போற்றார்கள் போற்றிச் செயின்.
  4. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
    துன்னியார் துன்னிச் செயின்.
  5. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற.
  6. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
    நாவாயும் ஓடா நிலத்து.
  7. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
    எண்ணி இடத்தால் செயின்.
  8. சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
    ஊக்கம் அழிந்து விடும்.
  9. சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
    உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
  10. காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
    வேலாள் முகத்த களிறு.

தெரிந்துதெளிதல்

  1. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
    திறந்தெரிந்து தேறப் படும்.
  2. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
    நாணுடையான் சுட்டே தெளிவு.
  3. அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு.
  4. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.
  5. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல்,
    506.அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
    பற்றிலர் நாணார் பழி.

507.காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.

508.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

509.தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

510.தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

தெரிந்துவினையாடல்

  1. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
    தன்மையான் ஆளப் படும்.
  2. வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
    ஆராய்வான் செய்க வினை.
  3. அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
    நன்குடையான் கட்டே தெளிவு.
  4. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்.
  5. அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
    சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
  6. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
    எய்த உணர்ந்து செயல்.
  7. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.
  8. வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
    அதற்குரிய னாகச் செயல்.
  9. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
    நினைப்பானை நீங்கும் திரு.

520 நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

சுற்றந்தழால்

  1. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
    சுற்றத்தார் கண்ணே உள.
  2. விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவும் தரும்.
  3. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
    கோடின்றி நீர்நிறைந் தற்று.

524.சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

525.கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.

526.பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.

527.காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

528.பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.

529.தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.

530.உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.

பொச்சாவாமை

  1. இறந்த வெகுளியின் தீதே சிறந்த
    உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

532.பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்சநிரப்புக் கொன் றாங்கு.

  1. பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
    எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
  2. அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
    பொச்சாப் புடையார்க்கு நன்கு,
  3. முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
    பின்னூறு இரங்கி விடும்.
  4. இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
    வாயின் அதுவொப்பது இல்.
  5. அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
    கருவியால் போற்றிச் செயின்.
  6. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
    இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
  7. இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
    மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
  8. உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
    உள்ளியது உள்ளப் பெறின்.

செங்கோன்மை
541.ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

542.வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி.

543.அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

544.குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

545.இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

546.வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

547.இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

548.எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

549.குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

550.கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

கொடுங்கோன்மை
551.கொலைமேற்கொண்டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

552.வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

  1. நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
    நாடொறும் நாடு கெடும்.
  2. கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
    சூழாது செய்யும் அரசு.
  3. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை.
  4. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
    மன்னாவாம் மன்னர்க் கொளி.
  5. துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
    அளியின்மை வாழும் உயிர்க்கு.
  6. இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
    மன்னவன் கோற்கீழ்ப் படின்.
  7. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்.

560.ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

வெருவந்தசெய்யாமை

  1. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
    ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
  2. கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டு பவர்.
  3. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
    ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
  4. இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
    உறைகடுகி ஒல்லைக் கெடும்.
  5. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
    பேஎய்கண் டன்னது உடைத்து.
  6. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
    நீடின்றி ஆங்கே கெடும்.
  7. கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
    அடுமுரண் தேய்க்கும் அரம்.
  8. இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
    சீறிற் சிறுகும் திரு.
  9. செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
    வெருவந்து வெய்து கெடும்.
  10. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
    இல்லை நிலக்குப் பொறை.

கண்ணோட்டம்

  1. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
    உண்மையான் உண்டிவ் வுலகு
  2. கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
    உண்மை நிலக்குப் பொறை.
  3. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண் என்னாம்
    கண்ணோட்டம் இல்லாத கண்.
  4. உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
    கண்ணோட்டம் இல்லாத கண்.
  5. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
    புண்ணென்று உணரப் படும்.
  6. மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
    டியைந்துகண் ணோடா தவர்.
  7. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
    கண்ணோட்டம் இன்மையும் இல்.
  8. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
    உரிமை உடைத்திவ் வுலகு.
  9. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
    பொறுத்தாற்றும் பண்பே தலை.

580,பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

ஒற்றாடல்

  1. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
    தெற்றென்க மன்னவன் கண்.
  2. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் தொழில்.
  3. ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
    கொற்றங் கொளக்கிடந்தது இல்.
  4. வினைசெய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
    அனைவரையும் ஆராய்வது ஒற்று.
  5. கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
    உகாஅமை வல்லதே ஒற்று.
  6. துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
    என்செயினும் சோர்விலது ஒற்று.
  7. மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
    ஐயப்பாடு இல்லதே ஒற்று.
  8. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
    ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
  9. ஒற்றெற் றுணராமை ஆள்க உடன் மூவர்
    சொற்றொக்க தேறப் படும்.
  10. சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
    புறப்படுத்தான் ஆகும் மறை.

ஊக்கமுடைமை

  1. உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
    உடையது உடையரோ மற்று.
  2. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்.
  3. ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
    ஒருவந்தம் கைத்துடை யார்.
  4. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை.
  5. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.
  6. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
  7. சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றுங் களிறு.

598.உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.

599.பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின்.

600.உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.

மடியின்மை
601 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.

  1. மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்.

603.மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.

604.குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

  1. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்.
  2. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
    மாண்பயன் எய்தல் அரிது.
  3. இடி புரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து
    மாண்ட உஞற்றி லவர்.
  4. மடிமை குடிமைக்கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
    அடிமை புகுத்தி விடும்.
  5. குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
    மடியாண்மை மாற்றக் கெடும்.
  6. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு.

ஆள்வினையுடைமை

  1. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்.

612.வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

  1. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
    வேளாண்மை என்னுஞ் செருக்கு.
  2. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
    வாளாண்மை போலக் கெடும்.
  3. இன்பம் விழையான் வினைவிழைவான் தன் கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்.

616.முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

617.மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

618.பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

619.தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

620.ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

இடுக்கணழியாமை

  1. இடுக்கண் வருங்கால் நகுக அதனை
    அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

622.வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

  1. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
    இடும்பை படாஅ தவர்.

624.மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

  1. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடுக்கட் படும்.
  2. அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
    ஓம்புதல் தேற்றா தவர்.
  3. இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
    கையாறாக் கொள்ளாதாம் மேல்.

628.இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

  1. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்பம் உறுதல் இலன்.
  2. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
    ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

அங்கவியல்
.

அமைச்சு
631.கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

632.வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

633.பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.

634.தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.

635.அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

636.மதி நுட்பம் நூலோடு உடையார்க்கு அதி நுட்பம்
யாவுள முன்நிற் பவை.

637.செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

638.அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

639.பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.

640.முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.

சொல்வன்மை
641.நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.

642.ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

643.கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

644.திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.

645.சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

646.வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.

647.சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

648.விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

649.பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

650.இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

வினைத்தூய்மை
651.துணைநலம் ஆக்கம் தருஉம் வினை நலம்
வேண்டிய எல்லாந் தரும்.

652.என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

653.ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.

654.இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

655.எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

656.ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

657.பழமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

658.கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.

659.அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

660.சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

வினைத்திட்பம்
661.வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.

662.ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

663.கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.

664.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

665.வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.

666.எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

667.உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

668.கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.

669.துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

670.எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.

வினைசெயல்வகை
671.சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

672.தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

673.ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.

674.வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

675.பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

676.முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.

677.செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.

678.வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

679.நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

680.உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.

தூது
681.அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

682.அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

683.நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

684.அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

685.தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.

686.கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.

687.கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.

688.தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

689.விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்.

690.இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

மன்னரைச் சேர்ந்தொழுதல்
691.அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

692.மன்னர் விழைப் விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.

693.போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

694.செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.

695.எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.

696.குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

697.வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

698.இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.

699.கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

700.பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.

குறிப்பறிதல்
701.கூறாமை நோக்ககே குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.

702.ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

703.குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.

704.குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.

705.குறிப்பில் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்?.

706.அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

707.முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.

708.முகம் நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.

709.பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.

710.நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.

அவையறிதல்

  1. அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்.
  2. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
    நடைதெரிந்த நன்மை யவர்.
  3. அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
    வகையறியார் வல்லதூஉம் இல்.

71 4. ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.

7 15. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.

  1. ஆற்றின் நிலை தளர்ந் தற்றே வியன்புலம்
    ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
  2. கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
    சொல்தெரிதல் வல்லார் அகத்து.

718.உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

  1. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
    நன்குசலச் சொல்லு வார்.
  2. அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
    அல்லார்முன் கோட்டி கொளல்.

அவையஞ்சாமை
721.வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

722.கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

723.பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

  1. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
    மிக்காருள் மிக்க கொளல்.
  2. ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
    மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
  3. வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
    நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
  4. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
    அஞ்சு மவன்கற்ற நூல்.
  5. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லா தார்.

729.கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.

  1. உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சிக்
    கற்ற செலச்சொல்லா தார்.

அங்கவியல் நாடு
731.தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.

732.பெரும் பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

733.பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.

734.உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

735.பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.

736.கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.

737இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

738.பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

739.நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

740.ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

அரண்
741.ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

742மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

743.உயர்வகலம் திண்மை அருமை இந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

744.சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.

745.கொளற்கரிதாய்க் கொண்ட கூழ்த்தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.

746.எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.

747.முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.

748.முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.

749.முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.

750.எனைமாட்சித் தாக்கியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.

பொருள்செயல்வகை
751பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.

752.இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

753.பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.

754.அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

755.அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

756.உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

757.அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

758.குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

759.செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.

  1. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
    ஏனை இரண்டும் ஒருங்கு.

படைமாட்சி
761.உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.

762.உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.

763.ஒலித்தக்கால் என்னாம் உவரி எல ேப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.

764.அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

765.கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.

766.மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.

767.தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.

768.அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.

769.சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.

770.நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.

படைச்செருக்கு
771.என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.

772.கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

773.பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.

774கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

775.விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

776.விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.

777.சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

778.உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.

779.இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

780.புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

நட்பு
781.செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

782.நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

783.நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

784.நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.

785.புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

786.முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

787.அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

788.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

789.நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

790.இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

நட்பாராய்தல்
791.நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

792.ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

793.குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்தியாக்க நட்பு.

794.குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

795.அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.

796.கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

797.ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

798.உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

799.கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.

800.மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு,.

பழைமை
801.பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

802.நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.

803.பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.

804.விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.

805.பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.

806.எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

807.அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

808.கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.

809.கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.

810.விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

தீ நட்பு
811.பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.

812.உறின்நட்டு அறின்ஒருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்ன?.

813.உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.

814.அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.

815.செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.

816.பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.

817.நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

818.ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.

819.கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

820.எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.

கூடா நட்பு

  1. சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு.
  2. இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
    மனம்போல வேறு படும்.
  3. பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
    ஆகுதல் மாணார்க் கரிது.
  4. முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
    வஞ்சரை அஞ்சப் படும்.
  5. மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
    சொல்லினால் தேறற்பாற்று அன்று.
  6. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
    ஒல்லை உணரப் படும்.
  7. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்.
  8. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
    அழுதகண் ணீரும் அனைத்து.
  9. மிகச்செய்து தம் மெள்ளு வாரை நகச்செய்து
    நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
  10. பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
    அகநட்பு ஒரீஇ விடல்.

பேதைமை
831.பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

832.பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.

833.நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

834.ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

835.ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.

836.பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

837.ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

838.மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.

839.பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.

840.கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

புல்லறிவாண்மை

  1. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
    இன்மையா வையா துலகு.
  2. அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
    இல்லை பெறுவான் தவம்.
  3. அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
    செறுவார்க்கும் செய்தல் அரிது.
  4. வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
    உடையம்யாம் என்னும் செருக்கு.
  5. கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
    வல்லதூஉம் ஐயம் தரும்.
  6. அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
    குற்றம் மறையா வழி.
  7. அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
    பெருமிறை தானே தனக்கு
  8. ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
    போஒம் அளவுமோர் நோய்.
  9. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
    கண்டானாம் தான்கண்ட வாறு.
  10. உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
    அலகையா வைக்கப் படும்.

இகல்

  1. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
    பண்பின்மை பாரிக்கும் நோய்.
  2. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
    இன்னாசெய் யாமை தலை.
  3. இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
    தாவில் விளக்கம் தரும்.
  4. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்.
  5. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
    மிகலூக்கும் தன்மை யவர்.
  6. இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
    தவலும் கெடலும் நணித்து.
  7. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
    இன்னா அறிவி னவர்.

858.இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.

  1. இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
    மிகல்காணும் கேடு தரற்கு.
  2. இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
    நன்னயம் என்னும் செருக்கு.

பகைமாட்சி

  1. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
    மெலியார்மேல் மேக பகை.
  2. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
    என்பரியும் ஏதிலான் துப்பு.
  3. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
    தஞ்சம் எளியன் பகைக்கு.
  4. நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
    யாங்கணும் யார்க்கும் எளிது.
  5. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
    பண்பிலன் பற்றார்க்கு இனிது.
  6. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
    பேணாமை பேணப் படும்.
  7. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
    மாணாத செய்வான் பகை.
  8. குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
    இனனிலனாம் ஏமாப் புடைத்து.
  9. செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
    அஞ்சும் பகைவர்ப் பெறின்.

870.கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.

பகைத்திறந்தெரிதல்

  1. பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
    நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
  2. வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
    சொல்லேர் உழவர் பகை.

873, ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

  1. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
    தகைமைக்கண் தங்கிற்று உலகு.
  2. தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
    இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
  3. தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
    தேறான் பகாஅன் விடல்.
  4. நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
    மென்மை பகைவர் அகத்து.
  5. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு.

879.இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

  1. உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
    செம்மல் சிதைக்கலா தார்.

உட்பகை

  1. நிழல்நீரும் இன்னாத இன்னாதமர் நீரும்
    இன்னாவாம் இன்னா செயின்.
  2. வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
    கேள்போல் பகைவர் தொடர்பு.
  3. உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
    மட்பகையின் மாணத் தெறும்.
  4. மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
    ஏதம் பலவும் தரும்.
  5. உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
    ஏதம் பலவும் தரும்.
  6. ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
    பொன்றாமை ஒன்றல் அரிது.
  7. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
    உட்பகை உற்ற குடி,
    888.அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
    உட்பகை உற்ற குடி.

889.எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.

890.உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.

பெரியாரைப் பிழையாமை

  1. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
    போற்றலுள் எல்லாம் தலை.
  2. பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
    பேரா இடும்பை தரும்.
  3. கெடல் வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
    ஆற்று பவர்கண் இழுக்கு.
  4. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
    ஆற்றாதார் இன்னா செயல்.
  5. யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
    வேந்து செறப்பட் டவர்.
  6. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
    பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
  7. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
    தகைமாண்ட தக்கார் செறின்.
  8. குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
    நின்றன்னார் மாய்வர் நிலத்து.
  9. ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
    வேந்தனும் வேந்து கெடும்.
  10. இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
    சிறந்தமைந்த சீரார் செறின்.

பெண்வழிச்சேறல்

  1. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
    வேண்டாப் பொருளும் அது.
  2. பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
    நாணாக நாணுத் தரும்.
  3. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
    நல்லாருள் நாணுத் தரும்.

904, மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.

  1. இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
    நல்லார்க்கு நல்ல செயல்.

906.இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.

907.பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.

908.நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.

909.அறவினையும் ஆன்றபொருளும் பிறவினையும் பெண்
ஏவல் செய்வார்கண் இல்.

910.எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

வரைவின்மகளிர்

  1. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
    இன்சொல் இழுக்குத் தரும்.
  2. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
    நயன்தூக்கி நள்ளா விடல்.
  3. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
    ஏதில் பிணந்தழீஇ அற்று.
  4. பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
    ஆயும் அறிவி னவர்.
  5. பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
    மாண்ட அறிவி னவர்.
  6. தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
    புன்னலம் பாரிப்பார் தோள்.
  7. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
    பேணிப் புணர்பவர் தோள்.
  8. ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
    மாய மகளிர் முயக்கு.
  9. வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
    பூரியர்கள் ஆழும் அளறு.

920 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

கள்ளுண்ணாமை

  1. உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
    கட்காதல் கொண்டொழுகு வார்.
  2. உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
    எண்ணப் படவேண்டா தார்.
  3. ஈன்றாள் முகத்தையும் இன்னாதால் என் மற்றுச்
    சான்றோர் முகத்துக் களி.

924.நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

925.கையறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

926.துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

927.உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

928.களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

929.களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

930.கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

சூது
931.வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

932.ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

933.உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

934.சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.

935.கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

936.அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.

937.பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

938.பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.

939.உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.

940.இழத்தொறுாஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறுாஉம் காதற்று உயிர்.

மருந்து
941 மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

  1. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின்.
  2. அற்றால் அறவறிந்து உண்கஅஃதுடம்பு
    பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
  3. அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து.
  4. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
    ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
  5. இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய்.

947.தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.

  1. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்.
  2. உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
    கற்றான் கருதிச் செயல்.
  3. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
    அப்பால் நாற்கூற்றே மருந்து.

ஒழிபியல் குடிமை
951.இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நானும் ஒருங்கு.

952.ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

953.நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

954.அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.

955.வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.

956.சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும் என்பார்.

957.குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

958.நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

959.நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

960.நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.

மானம்
961.இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

962.சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

963.பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

964.தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

965.குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

966.புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

967.ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

968.மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

969.மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

970.இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

பெருமை
971.ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

972.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

973.மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

974.ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

975.பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

976.சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள்வேம் என்னும் நோக்கு.

977.இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

978.பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

979.பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

980.அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

சான்றாண்மை
981.கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

982.குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

983.அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.

984.கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

985.ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

986.சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

987.இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

988.இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்.

989.ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

990.சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.

பண்புடைமை
991.எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

992.அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

993.உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

994.நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

995.நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

996.பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.

997.அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.

998.நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.

999.நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.

1000.பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.

நன்றியில்செல்வம்
1001.வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

1002.பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

1003.ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

1004.எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

1005.கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

1006.ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

1007.அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

1008.நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

1009.அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

1010.சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

நாணுடைமை

  1. கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
    நல்லவர் நாணுப் பிற.
  2. ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
    நாணுடைமை மாந்தர் சிறப்பு.
  3. ஊனைக் குறித்த உயிரெல்லாம் நான்என்னும்
    நன்மை குறித்தது சால்பு.
  4. அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
    பிணிஅன்றோ பீடு நடை.
  5. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
    உறைபதி என்னும் உலகு.
  6. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
    பேணலர் மேலா யவர்.
  7. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
    நாண்துறவார் நாணாள் பவர்.
  8. பிறர்நாணத் தக்கது தான் நாணானாயின்
    அறம்நாணத் தக்கது உடைத்து.
  9. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
    நாணின்மை நின்றக் கடை.
  10. நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
    நாணால் உயிர்மருட்டி அற்று.

குடிசெயல்வகை

  1. கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
    பெருமையின் பீடுடையது இல்.
  2. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
    நீள்வினையால் நீளும் குடி.
  3. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
    மடிதற்றுத் தான்முந் துறும்.
  4. சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
    தாழாது உஞற்று பவர்க்கு.
  5. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
    சுற்றமாச் சுற்றும் உலகு.
  6. நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான் பிறந்த
    இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
  7. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
    ஆற்றுவார் மேற்றே பொறை.
  8. குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
    மானங் கருதக் கெடும்.
  9. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
    குற்ற மறைப்பான் உடம்பு.
  10. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
    நல்லாள் இலாத குடி.

உழவு
1031 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

  1. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
    எழுவாரை எல்லாம் பொறுத்து.
  2. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்.
  3. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
    அலகுடை நீழ லவர்.
  4. இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
    கைசெய்தூண் மாலை யவர்.
  5. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
    விட்டேம்என் பார்க்கும் நிலை.
  6. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
    வேண்டாது சாலப் படும்.

1038 ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

  1. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
    இல்லாளின் ஊடி விடும்.
  2. இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
    நிலமென்னும் நல்லாள் நகும்.

நல்குரவு

  1. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னா தது.
  2. இன்மை எனவொரு பாவி மறுமையும்
    இம்மையும் இன்றி வரும்.
  3. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
    நல்குரவு என்னும் நசை.

1044.இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

  1. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
    துன்பங்கள் சென்று படும்.

1046.நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

  1. அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
    பிறன்போல நோக்கப் படும்.
  2. இன்றும் வருவது கொல்லோ நெருதலும்
    கொன்றது போலும் நிரப்பு.
  3. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
    யாதொன்றும் கண்பாடு அரிது.
  4. துப்புர வில்லார் துவரத் துறவாமை
    உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

இரவு

  1. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
    அவர்பழி தம்பழி அன்று.
  2. இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
    துன்பம் உறாஅ வரின்.

1053.கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.

  1. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
    கனவிலும் தேற்றாதார் மாட்டு.
  2. கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
    இரப்பவர் மேற்கொள் வது.
  3. கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
    எல்லாம் ஒருங்கு கெடும்.

1057.இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.

  1. இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
    மரப்பாவை சென்றுவந் தற்று.
  2. ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
    மேவார் இலா அக்கடை.
  3. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
    தானேயும் சாலும் கரி.

இரவச்சம்

  1. கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
    இரவாமை கோடி உறும்.
  2. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான்.
  3. இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
    வன்மையின் வன்பாட்ட தில்.
  4. இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
    காலும் இரவொல்லாச் சால்பு.
  5. தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
    உண்ணலின் ஊங்கினிய தில்.
  6. ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
    இரவின் இளிவந்த தில்.
  7. இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
    கரப்பார் இரவன்மின் என்று.
  8. இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
    பார்தாக்கப் பக்கு விடும்.
  9. இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
    உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

1070.கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.

கயமை

  1. மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பாரி யாங்கண்ட தில்.
  2. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
    நெஞ்சத்து அவலம் இலர்.
  3. தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
    மேவன செய்தொழுக லான்.
  4. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
    மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
  5. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
    அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
  6. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
  7. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
    கூன்கையர் அல்லா தவர்க்கு.
  8. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
    கொல்லப் பயன்படும் கீழ்.
  9. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
    வடுக்காண வற்றாகும் கீழ்.
  10. எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
    விற்றற்கு உரியர் விரைந்து.