Ramalinga Swamigal – Vinnappa Kalivenba

முதல் திருமுறை / First Thirumurai

  1. விண்ணப்பக் கலிவெண்பா
    viṇṇappak kaliveṇpā

காப்பு
நேரிசை வெண்பா
திருச்சிற்றம்பலம்

  1. அவ்வவ் விடைவந் தகற்றி அருள்தரலால்
    எவ்வெவ் விடையூறும் எய்தலிலம் – தெவ்வர்தமைக்
    கன்றுமத மாமுகமுங் கண்மூன்றுங் கொண்டிருந்த
    தொன்றதுநம் முள்ள முறைந்து.
    கலிவெண்பா
    திருச்சிற்றம்பலம்
  2. சொற்பெறுமெய்ஞ் ஞானச் சுயஞ்சோதி யாந்தில்லைச்
    சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே – நற்சிவையாந்
  3. தாயி னுலகனைத்துந் தாங்குந் திருப்புலியூர்க்
    கோயி லமர்ந்தகுணக் குன்றமே – மாயமிகும்
  4. வாட்களமுற் றாங்குவிழி மாதர்மய லற்றவர்சூழ்
    வேட்களமுற் றோங்கும் விழுப்பொருளே – வாழ்க்கைமனை
  5. நல்வாயி லெங்கு நவமணிக்குன் றோங்குதிரு
    நெல்வாயி னின்றொளிரு நீளொளியே – செல்வாய்த்
  6. தெழிப்பாலை வேலைத் திரையொலிபோ லார்க்குங்
    கழிப்பாலை யின்பக் களிப்பே – விழிப்பாலன்
  7. கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்கச் சோதிதரு
    நல்லூர்ப் பெருமணம்வாழ் நன்னிலையே – சொல்லுந்
  8. தயேந்திர ருள்ளத் தடம்போ லிலங்கும்
    மயேந்திரப் பள்ளியின்ப வாழ்வே – கயேந்திரனைக்
  9. காயலுறா தன்றுவந்து காத்தோன் புகழ்முல்லை
    வாயிலி னோங்கு மணிவிளக்கே – மேய
  10. பலிக்காவூர் தோறும் பதஞ்சேப்பச் சென்று
    கலிக்காமூர் மேவுங் கரும்பே – வலிக்காலில்
  11. பாய்48க்காடு கின்றவொரு பச்சை முகில்பரவுஞ்
    சாய்க்காடு மேவுந் தடங்கடலே – வாய்க்கமையச்
  12. சொல்லவ னீச்சரங்கு தோயவும்ப ராம்பெருமைப்
    பல்லவ னீச்சரத்தெம் பாவனமே – நல்லவர்கள்
  13. கண்காட்டு நெற்றிக் கடவுளே யென்றுதொழ
    வெண்காட்டின் மேவுகின்ற மெய்ப்பொருளே – தண்காட்டிக்
  14. கார்காட்டித் தையலர்தங் கண்காட்டிச் சோலைகள்சூழ்
    சீர்காட்டுப் பள்ளிச் சிவக்கொழுந்தே – பார்காட்
  15. டுருகாவூ ரெல்லா மொளிநயக்க வோங்குங்
    குருகாவூர் வெள்ளடையெங் கோவே – அருகாத
  16. கார்49காழி னெஞ்சக் கவுணியர்க்குப் போதமருள்
    சீர்காழி ஞானத் திரவியமே – ஓர்காழிப்
  17. பாலற்கா வன்று பசும்பொற்றா ளங்கொடுத்த
    கோலக்கா மேவுங் கொடையாளா – கோலக்கா
  18. உள்ளிருக்கும் புள்ளிருக்கு மோதும் புகழ்வாய்ந்த
    புள்ளிருக்கும் வேளூர்ப் புரிசடையாய் -கள்ளிருக்கும்
  19. காவின் மருவுங் கனமுந் திசைமணக்கும்
    கோவின் மருவுகண்ணார் கோயிலாய் – மாவின்
  20. இடைமுடியின் றீங்கனியென் றெல்லின் முசுத்தாவும்
    கடைமுடியின் மேவுங் கருத்தா – கொடைமுடியா
  21. நன்றியூ ரென்றிந்த ஞாலமெலாம் வாழ்த்துகின்ற
    நின்றியூர் மேவு நிலைமையனே – ஒன்றிக்
  22. கருப்புன்கூ ருள்ளக் கயவர் நயவாத்
    திருப்புன்கூர் மேவுஞ் சிவனே – உருப்பொலிந்தே
  23. ஈடூரி லாதுயர்ந்த ஏதுவினா லோங்குதிரு
    நீடூ ரிலங்கு நிழற்றருவே – பீடுகொண்டு
  24. மன்னியூ ரெல்லாம் வணங்க வளங்கொண்ட
    அன்னியூர் மேவு மதிபதியே – மன்னர்சுக
  25. வாழ்விக் குடிகளடி மண்பூச லாலென்னும்
    வேழ்விக் குடியமர்ந்த வித்தகனே – சூழ்வுற்றோர்
  26. விண்ணெதிர்கொண் டிந்திரன்போன் மேவிநெடு நாள்வாழப்
    பண்ணெதிர்கொள் பாடிப் பரம்பொருளே – நண்ணும்
  27. வணஞ்சே ரிறைவன் மகிழ்ந்து வணங்கும்
    மணஞ்சேரி நீங்கா மகிழ்வே – மணஞ்சேர்ந்துந்ன்
  28. வாரட்ட கொங்கை மலையா ளொடுங்கொறுக்கை
    வீரட்ட மேவும் வியனிறைவே – ஓரட்ட
  29. திக்குங் கதிநாட்டிச் சீர்கொள்திருத் தொண்டருளம்
    ஒக்குங் கருப்பறிய லூரரசே – மிக்கதிரு
  30. மாவளருஞ் செந்தா மரைவளருஞ் செய்குரக்குக்
    காவளரு மின்பக் கனசுகமே – தாவுமயல்
  31. காழ்கொ ளிருமனத்துக் காரிரு­த் தோர்மருவும்
    வாழ்கொளி புத்தூர்50 மணிச்சுடரே – தாழ்வகற்ற
  32. நண்ணிப் படிக்கரையர் நாடோறும் வாழ்த்துகின்ற
    மண்ணிப் படிக்கரைவாழ் மங்கலமே – விண்ணினிடை
  33. வாமாம் புலியூர் மலர்ச்சோலை சூழ்ந்திலங்கும்
    ஓமாம் புலியூர்வாழ் உத்தமமே – நேமார்ந்த
  34. வானாட்டு முள்ளூர் மருவுகின்றோர் போற்றுதிருக்
    கானாட்டு முள்ளூர்க் கலைக்கடலே – மேனாட்டும்
  35. தேரையூர்ச் செங்கதிர்போற் செம்மணிக ணின்றிலங்கும்
    நாரையூர் மேவு நடுநிலையே – பாரில்
  36. உடம்பூர் பவத்தை யொழித்தருளும் மேன்மைக்
    கடம்பூர்வாழ் என்னிரண்டு கண்ணே – தடம்பொழிலில்
  37. கொந்தணவுங் கார்க்குழலார் கோலமயிற் போலுலவும்
    பந்தண நல்லூர்ப் பசுபதியே – கந்தமலர்
  38. அஞ்சனூர்51 செய்ததவத் தாலப் பெயர்கொண்ட
    கஞ்சனூர் வாழுமென்றன் கண்மணியே – அஞ்சுகங்கள்
  39. நாடிக்கா வுள்ளே நமச்சிவா யம்புகலும்
    கோடிக்கா மேவுங் குளிர்மதியே – ஓடிக்
  40. கருமங்க லக்குடியிற் காண்டுமென வோதும்
    திருமங்க லக்குடியில் தேனே – தரும
  41. மனந்தாள் மலரை மருவுவிப்போர் வாழும்
    பனந்தாளிற் பாலுகந்த பாகே – தினந்தாளிற்
  42. சூழ்திருவாய்ப் பாடியங்கு சூழ்கினுமா மென்றுலகர்
    வாழ்திருவாய்ப் பாடிஇன்ப வாரிதியே – ஏழ்புவிக்குள்
  43. வாய்ஞ்ஞலூ ரீதே மருவவென வானவர்சேர்
    சேய்ஞ்ஞலூர் இன்பச் செழுங்கனியே – வாஞ்சையுறும்
  44. சீவன் குடியுறவிச் சீர்நகரொன் றேயெனுஞ்சீர்த்
    தேவன் குடிமகிழ்ந்த தெள்ளமுதே – ஓவில்
  45. மயலூர் மனம்போல் வயலிற் கயலூர்
    வியலூர் சிவானந்த வெற்பே – அயலாம்பல்
  46. மட்டையூர் வண்டினங்கள் வாய்ந்து விருந்துகொளும்
    கொட்டையூ ருட்கிளருங் கோமளமே – இட்டமுடன்
  47. என்னம்ப ரென்னம்ப ரென்றயன்மால் வாதுகொள
    இன்னம்பர் மேவிநின்ற என்னுறவே – முன்னம்பு
  48. மாற்கும் புறம்பியலா வாய்மையருள் செய்யவுளம்
    ஏற்கும் புறம்பியம்வாழ் என்னுயிரே – மாற்கருவின்
  49. கண்விசைய மங்கைக் கனிபோற் பெறத்தொண்டர்
    எண்விசைய மங்கையில்வாழ் என்குருவே – மண்ணுலகில்
  50. வைகாவூர் நம்பொருட்டான் வைகியதென் றன்பர்தொழும்
    வைகாவூர் மேவியவென் வாழ்முதலே – உய்யும்வகைக்
  51. காத்தும் படைத்துங் கலைத்துநிற்போர் நாடோறும்
    ஏத்துங் குரங்காட்டின்52 என்னட்பே – மாத்தழைத்த
  52. வண்பழனத் தின்குவிவெண் வாயிற்றேன் வாக்கியிட
    உண்பழனத் தென்றன் உயிர்க்குயிரே – பண்பகன்ற
  53. வெய்யாற்றி னின்றவரை மெய்யாற்றி னேற்றுதிரு
    ஐயாற்றின் மேவியஎன் னாதரவே – பொய்யாற்றி
  54. மெய்த்தான நின்றோர் வெளித்தான மேவுதிரு
    நெய்த்தானத் துள்ளமர்ந்த நித்தியமே – மைத்த
  55. கரும்புலியூர்க் காளையொடுங் கண்ணோட்டங் கொள்ளும்
    பெரும்புலியூர் வாழ்கருணைப் பேறே – விரும்பிநிதம்
  56. பொன்னுங்53 கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்தருளை
    மன்னு மழபாடி வச்சிரமே – துன்னுகின்ற
  57. நாய்க்குங் கடையேன் நவைதீர நற்கருணை
    வாய்க்கும் பழுவூர் மரகதமே – தேய்க்களங்கில்
  58. வானூர் மதிபோன் மணியாற் குமுதமலர்
    கானூ ருயர்தங்கக் கட்டியே – நானூறு
  59. கோலந் துறை55 கொண்ட கோவையருள் கோவைமகிழ்
    ஆலந் துறை56யின் அணிமுத்தே – நீலங்கொள்
  60. தேந்துறையி லன்னமகிழ் சேக்கை பலநிலவு
    மாந்துறைவாழ் மாணிக்க மாமலையே – ஏந்தறிவாம்
  61. நூற்றுறையில் நின்றவர்கள் நோக்கிமகிழ் வெய்துதிருப்
    பாற்றுறையில் நின்ற பரஞ்சுடரே – நாற்றிசையுந்
  62. தேனைக்கா வுள்மலர்கள் தேங்கடலென் றாக்குவிக்கும்
    ஆனைக்கா மேவியமர் அற்புதமே – மானைப்போல்
  63. மைஞ்ஞ“ல வாட்கண் மலராள் மருவுதிருப்
    பைஞ்ஞ“லி மேவும் பரம்பரமே – எஞ்ஞான்றும்
  64. ஏச்சிரா மங்கலத்தோ டின்பந் தரும்பாச்சி
    லாச்சிரா மஞ்சேர் அருள்நிலையே – நீச்சறியா
  65. தாங்கோய் மலைப்பிறவி யார்கலிக்கோர் வார்கலமாம்
    ஈங்கோய் மலைவாழ் இலஞ்சியமே – ஓங்காது
  66. நாட்போக்கி நிற்கு நவையுடையார் நாடரிதாம்
    வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே – கோட்போக்கி
  67. நில்லுங் கடம்ப நெறிபோ லெனப்பூவை
    சொல்லுங் கடம்பந் துறைநிறைவே – மல்லலொடு
  68. வாழும் பராய்த்துறைவான் மன்னவரு மன்னவருஞ்
    சூழும் பராய்த்துறைவாழ் தோன்றலே – கூழும்பல்
  69. நற்குடியு மோங்கி நலம்பெருகு மேன்மைதிருக்
    கற்குடியிற் சந்தான கற்பகமே – சிற்சுகத்தார்
  70. பிற்சநந மில்லாப் பெருமை தருமுறையூர்ச்
    சற்சனர்சேர் மூக்கீச் சரத்தணியே – மற்செய்
  71. அராப்பள்ளி மேவு மவனின்று வாழ்த்தும்
    சிராப்பள்ளி ஞானத் தெளிவே – இராப்பள்ளி
  72. நின்றெழன்மெய் யன்றெனவே நேர்ந்துலகு வாழ்த்துகின்ற
    நன்றெறும்பி யூரிலங்கு நன்னெறியே – துன்றுகயற்
  73. கண்ணார் நெடுங்களத்தைக் கட்டழித்த மெய்த்தவர்சூழ்
    தண்ணார் நெடுங்களமெய்த் தாரகமே – எண்ணார்
  74. தருக்காட்டுப் பள்ளித் தகைகொண்டோர் சூழுந்
    திருக்காட்டுப் பள்ளியில்வாழ் தேவே – மருக்காட்டு
  75. நீலம் பொழிற்குள் நிறைதடங்கட் கேர்காட்டும்
    ஆலம் பொழிற்சிவயோ கப்பயனே – சீலநிறை
  76. வாந்துருத்தி கொண்டுள் ளனலெழுப்பு வோர்புகழும்
    பூந்துருத்தி மேவுசிவ புண்ணியமே – காந்தருவத்
  77. தண்டியூர் போற்றுந் தகைகாசிக் கட்செய்து
    கண்டியூர் வாழுங் களைகண்ணே – கொண்டியல்பின்
  78. வேற்றுத் துறையுள் விரவா தவர்புகழும்
    சோற்றுத் துறையுட் சுகவளமே – ஆற்றலிலாத்
  79. தீதிக் குடியென்று செப்பப் படார்மருவும்
    வேதிக் குடி58 யின்ப வெள்ளமே – கோதியலும்
  80. வன்குடித் திட்டை மருவார் மருவுதிருத்
    தென்குடித் திட்டைச் சிவபதமே – நன்குடைய
  81. உள்ளமங்கை மார்மே லுறுத்தா தவர்புகழும்
    புள்ளமங்கை வாழ்பரம போகமே – கள்ளமிலஞ்
  82. சக்கரப் பள்ளிதனிற் றாம்பயின்ற மைந்தர்கள்சூழ்
    சக்கரப் பள்ளிதனில் தண்ணளியே – மிக்க
  83. அருகாவூர் சூழ்ந்தே அழகுபெற வோங்கும்
    கருகாவூர் இன்பக் கதியே – முருகார்ந்த
  84. சோலைத் துறையிற் சுகஞ்சிவநு‘ல் வாசிக்கும்
    பாலைத் துறையிற் பரிமளமே – சீலத்தர்
  85. சொல்லூ ரடியப்பர் தூயமுடி மேல்வைத்த
    நல்லூ ரமர்ந்தநடு நாயகமே – மல்லார்ந்த
  86. மாவூ ரிரவியின்பொன் வையமள வுஞ்சிகரி
    ஆவூரி லுற்றவெங்கள் ஆண்தகையே – ஓவாது
  87. சித்திமுற்ற யோகஞ் செழும்பொழிலிற் பூவைசெயும்
    சத்திமுற்ற மேவுஞ் சதாசிவமே – பத்தியுற்றோர்
  88. முட்டீச் சுரத்தின் முயலா வகையருளும்
    பட்டீச் சரத்தெம் பராபரமே – துட்டமயல்
  89. தீங்குவிழை யார்தமைவான் சென்றமரச் செய்விக்க
    ஓங்குபழை யாறையிலென் னுள்ளுவப்பே – பாங்குபெற
  90. ஆர்ந்த வடவிலையான் அன்னத்தான் போற்றிநிதம்
    சார்ந்த வடதளிவாழ் தற்பரமே – சேர்ந்த
  91. மலஞ்சுழி கின்ற மனத்தர்க் கரிதாம்
    வலஞ்சுழி வாழ்பொன் மலையே – நிலஞ்சுழியா
  92. தோணத்தில் வந்தோ னுடன்றுதித்து வாழ்கும்ப
    கோணத்தில் தெய்வக் குலக்கொழுந்தே – மாணுற்றோர்
  93. காழ்க்கோட்ட நீங்கக் கருதுங் குடமூக்கிற்
    கீழ்க்கோட்ட மேவுமன்பர் கேண்மையே – வாழ்க்கோட்டத்
  94. தேரோண மட்டுந் திகழ்குடந்தை மட்டுமின்றிக்
    காரோண மட்டுங் கமழ்மலரே – சீரோங்கும்
  95. யோகீச் சுரர்நின் றுவந்து வணங்குதிரு
    நாகீச் சுரமோங்கு நங்கனிவே – ஓகையுளம்
  96. தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண் சூழ்பழியைப்
    போக்கும் இடைமருதிற் பூரணமே – நீக்கமிலா
  97. நன்குரங் காணு நடையோ ரடைகின்ற
    தென்குரங் காடுதுறைச் செம்மலே – புன்குரம்பை
  98. ஏலக் குடிபுகுந்த எம்மனோர்க் குண்மைதரு
    நீலக் குடியிலங்கு நிட்களமே – ஞாலத்து
  99. நீடக்கோர் நாளும் நினைந்தேத் திடும்வைகல்
    மாடக்கோ யிற்குண் மதுரமே – பாடச்சீர்
  100. வல்ல தமிழ்ப்புலவர் மன்னி வணங்குதிரு
    நல்லமகிழ் இன்ப நவவடிவே – இல்லமயல்
  101. ஆழம்பங் கென்ன வறிந்தோர் செறிந்தேத்தும்
    கோழம்பம் வாழ்கருணைக் கொண்டலே – வீழும்பொய்
  102. தீரா வடுவுடையார் சேர்தற் கருந்தெய்வச்
    சீரா வடுதுறையெஞ் செல்வமே – பேராக்
  103. கருத்திருத்தி யேத்துங் கருத்தர்க் கருள்செய்
    திருத்துருத்தி இன்பச் செழிப்பே – வருத்துமயல்
  104. நாளு மெழுந்தூர் நவையறுக்கு மன்பருள்ளம்
    நீளும் அழுந்தூர் நிறைதடமே – வேளிமையோர்
  105. வாயூரத் தேமா மலர்59 சொரிந்து வாழ்த்துகின்ற
    மாயூரத் தன்பர் மனோரதமே – தேயா
  106. வளநகரென் றெவ்வுலகும் வாழ்த்தப் படுஞ்சீர்
    விளநகர்வா ழெங்கண் விருந்தே – இளமைச்
  107. செறியலூர் கூந்தல் திருவனையா ராடும்
    பறியலூர் வாழ்மெய்ப் பரமே – நெறிகொண்டே
  108. அன்பள்ளி யோங்கு மறிவுடையோர் வாழ்த்துஞ்செம்
    பொன்பள்ளி வாழ்ஞான போதமே – இன்புள்ளித்
  109. தெள்ளியார் போற்றித் திகழுந் திருநன்னிப்
    பள்ளியார்ந் தோங்கும் பரசிவமே – எள்ளுறுநோய்
  110. ஏய வலம்புரத்தை யெண்ணாம லெண்ணுகின்றோர்
    மேய வலம்புரத்து மேதகவே – தூயகொடி
  111. அங்காடு கோபுரம்வா னாற்றாடு கின்றதலைச்
    சங்காடு மேவுஞ் சயம்புவே – பொங்குமிருட்
  112. கூறுதிரு வாக்கூர் கொடுப்பனபோற் சூழ்ந்துமதில்
    வீறுதிரு வாக்கூர் விளக்கமே – மாறகற்றி
  113. நன்கடையூர் பற்பலவு நன்றிமற வாதேத்தும்
    தென்கடையூர்60 ஆனந்தத் தேறலே – வன்மையிலாச்
  114. சொற்கடவி மேலோர் துதித்தலொழி யாதோங்கு
    நற்கடவூர் வீரட்ட நாயகனே – வற்கடத்தும்
  115. வாட்டக் குடிசற்றும் வாய்ப்பதே யில்லையெனும்
    வேட்டக் குடிமேவு மேலவனே – நாட்டமுற்ற
  116. வாக்குந் தெளிச்சேரி மாதவத்தர்க் கின்பநலம்
    ஆக்குந் தெளிச்சேரி அங்கணனே – நீக்கும்
  117. கரும புரத்திற் கலவா தருள்செய்
    தரும புரஞ்செய் தவமே – இருமையினும்
  118. எள்ளாற்றின் மேவாத ஏற்புடையோர் சூழ்ந்திறைஞ்சு
    நள்ளாற்றின் மேவியஎன் நற்றுணையே – தெள்ளாற்றின்
  119. நீட்டாறு கொண்டரம்பை நின்று கவின்காட்டும்
    கோட்டாறு மேவுங் குளிர்துறையே – கூட்டாக்
  120. கருவம்பர் தம்மைக் கலவாத மேன்மைத்
    திருவம்பர் ஞானத் திரட்டே – ஒருவந்தர்
  121. மாகாளங் கொள்ள மதனைத் துரத்துகின்ற
    மாகாளாத் தன்பர் மனோலயமே – யோகாளக்
  122. காயச்சூர் விட்டுக் கதிசேர வேட்டவர்சூழ்
    மீயச்சூர் தண்ணென்னும் வெண்ணெருப்பே – மாயக்
  123. களங்கோயில் நெஞ்சக் கயவர் மருவா
    இளங்கோயின் ஞான இனிப்பே – வளங்கோ€
  124. நாடுந் திலத நயப்புலவர் நாடோறும்
    பாடுந் திலதைப் பதிநிதியே – ஆடுமயில்
  125. காம்புரங்கொள் தோளியர்பொற் காவிற் பயில்கின்ற
    பாம்புரங்கொள் உண்மைப் பரம்பொருளே – ஆம்புவனம்
  126. துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலஞ் செய்துவகை
    மன்னுஞ் சிறுகுடிஆன் மார்த்தமே – முன்னரசும்
  127. காழி மிழலையருங் கண்டுதொழக் காசளித்த
    வீழி மிழலை விராட்டுருவே – ஊழிதொறும்
  128. மன்னியூர் மால்விடையாய் வானவா வென்றுதொழ
    வன்னியூர் வாழு மணிகண்டா – இந்நிமிடம்
  129. சிந்துங் கருவலியின் திண்மையென்று தேர்ந்தவர்கள்
    முந்துங் கருவிலிவாழ் முக்கண்ணா – மந்தணத்தைக்
  130. காணு மருந்துறையிக் காமர்தல மென்றெவரும்
    பேணு பெருந்துறையிற் பெம்மானே – ஏணுடன்கா
  131. ஈட்டும் பெருநறையா றென்ன வயலோடி
    நாட்டும் பெருநறையூர் நம்பனே – காட்டும்
  132. பரிசிற் கரைப்புற்றோர் பாங்குபெற வோங்கும்
    அரிசிற் கரைப்புத்தூ61 ரானே – தரிசனத்தெக்
  133. காலுஞ் சிவபுரத்தைக் காதலித்தோர் தங்கள்துதி
    ஏலுஞ் சிவபுரத்தி லெம்மானே – மாலுங்கொள்
  134. வெப்புங் கலையநல்லோர் மென்மதுரச் சொன்மாலை
    செப்புங் கலயநல்லூர்ச் சின்மயனே – செப்பமுடன்
  135. ஓங்குந் திருத்தொண்டர் உள்குளிர நல்லருளால்
    தாங்குங் கருக்குடிவாழ் சங்கரனே – ஆங்ககனந்
  136. தாஞ்சியத்தை62 வேங்கைத் தலையாற் றடுக்கின்ற
    வாஞ்சியத்தின் மேவு மறையோனே – ஆஞ்சியிலா
  137. திந்நிலத்தும் வானாதி யெந்நிலத்து மோங்குபெரு
    நன்னிலத்து வாழ்ஞான நாடகனே – மன்னுமலர்
  138. வண்டீச் சுரம்பாடி வார்மதுவுண் டுள்களிக்குங்
    கொண்டீச் சுரத்தமர்ந்த கோமானே – கண்டீச
  139. நண்பனையூ ரன்புகழும் நம்பவென உம்பர்தொழத்
    தண்பனையூர் மேவுஞ் சடாதரனே – பண்புடனே
  140. எற்குடியா னங்கொண் டிருக்க மகிழ்ந்தளித்த
    விற்குடியின் வீரட்ட மேயவனே – சொற்கொடிய
  141. வன்புகலா நெஞ்சின் மருவும் ஒருதகைமைத்
    தென்புகலூர் வாழ்மகா தேவனே – இன்பமறை
  142. அர்த்தமா நீக்கரிய வாதார மாகிநின்ற
    வர்த்தமா நேச்சரத்து வாய்ந்தவனே – மித்தையுற்ற
  143. காமனதீ சங்கெடவே கண்பார்த் தருள்செய்த
    ராமனதீ சம்பெறுநி ராமயனே – தோமுண்
  144. மயற்றூர் பறித்த மனத்தில் விளைந்த
    பயற்றூர் திசையம் பரனே – இயற்றுஞ்சீர்
  145. ஆச்சிரமே வுஞ்செங்காட் டங்குடியி னங்கணப
    தீச்சரம்வா ழுஞ்சந்த்ர சேகரனே – ஏச்சகல
  146. விண்மருவி னோனை விடநீக்க நல்லருள்செய்
    வண்மருகல் மாணிக்க வண்ணனே – திண்மைகொண்ட
  147. மாத்தமங்கை யுள்ளம் மருவிப் பிரியாத
    சாத்தமங்கைக் கங்கைச் சடாமுடியோய் – தூத்தகைய
  148. பாகைக்கா ரென்னும் பணிமொழியார் வாழ்த்தோவா
    நாகைக்கா ரோணம் நயந்தோனே – ஓகையற
  149. விக்கல் வருங்கால் விடாய்தீர்த் துலகிடைநீ
    சிக்கலெனுஞ் சிக்கல் திறலோனே – மிக்கமினார்
  150. வாளூர் தடங்கண் வயல்காட்டி யோங்குங்கீழ்
    வேளூரிற் செங்கண் விடையோனே – நீளுவகைப்
  151. பாவூ ரிசையிற் பயன்சுவையிற் பாங்குடைய
    தேவூர் வளர்தேவ தேவனே – பூவினிடை
  152. இக்கூடன் மைந்த வினிக்கூட லென்றுபள்ளி
    முக்கூடன் மேவியமர் முன்னவனே – தக்கநெடுந்
  153. தேரூ ரணிவீதிச் சீரூர் மணிமாட
    ஆரூரி லெங்கள் அருமருந்தே – நீரூர்ந்த
  154. காரூர் பொழிலுங் கனியீந் திளைப்பகற்றும்
    ஆரூ ரரனெறிவே ளாண்மையே – ஏரார்ந்த
  155. மண்மண் டலிகர் மருவுமா ரூர்ப்பரவை
    உண்மண் டலி63 எம் உடைமையே – திண்மைக்
  156. களமர் மகிழக் கடைசியர் பாடும்
    விளமர் கொளுமெம் விருப்பே – வளமை
  157. எருக்கரவீ ரஞ்சே ரெழில்வேணி கொண்டு
    திருக்கரவீ ரஞ்சேர் சிறப்பே – உருக்க
  158. வருவேளூர் மாவெல்லா மாவேறுஞ் சோலைப்
    பெருவேளூர் இன்பப் பெருக்கே – கருமை
  159. மிலையாலங் காட்டு மிடற்றாயென் றேத்தும்
    தலையாலங் காட்டுத் தகவே – நிலைகொள்
  160. தடவாயில் வெண்மணிகள் சங்கங்க ளீனும்
    குடவாயில் அன்பர் குறிப்பே – மடவாட்கோர்
  161. கூறை64 யுவந்தளித்த கோவேயென் றன்பர்தொழச்
    சேறை யுவந்திருந்த சிற்பரமே – வேறுபடாப்
  162. பாலூர் நிலவிற் பணிலங்கள் தண்கதிர்செய்
    நாலூரில் அன்பர்பெறு நன்னயமே – மேலூரும்
  163. நோய்க்கரையுட் செய்யாத நோன்மையோர் சூழ்ந்தகடு
    வாய்க்கரையுண் மேவுகின்ற வண்மையே – வாய்த்த
  164. பெரும்பூகந் தெங்கிற் பிறங்க வளங்கொள்ளும்
    இரும்பூளை மேவி யிருந்தோய் – விரும்பும்
  165. விரதப் பெரும்பாழி விண்ணவர்க ளேத்தும்
    அரதைப் பெரும்பாழி ஆர்ந்தோய் – சரதத்தால்
  166. ஏதும் அவணிவணென் றெண்ணா தவரிறைஞ்சி
    ஓதும் அவளிவணல் லூருடையோய் – கோதகன்ற
  167. நீட்டுஞ் சுருதி நியமத்தோர்க் கின்னருளை
    நீட்டும் பரிதி நியமத்தோய் – காட்டியநந்
  168. தேவனூ ரென்று திசைமுகன்மால் வாழ்த்துகின்ற
    பூவனூர் மேவும் புகழுடையோய் – பூவலகாம்
  169. ஈங்கும்பா தாளமுத லெவ்வுலகு மெஞ்ஞான்றுந்
    தாங்கும்பா தாளேச் சரத்தமர்ந்தோய் – ஓங்குபுத்தி
  170. மான்களரி லோட்டி மகிழ்வோ டிருந்தேத்தும்
    வான்களரில் வாழு மறைமுடிபே – மேன்மைதரும்
  171. முற்றேமம் வாய்ந்த முனிவர் தினம்பரவும்
    சிற்றேமம் வாய்ந்த செழுங்கதிரே – கற்றவர்கள்
  172. எங்குமுசாத் தான மிருங்கழக மன்றமுதல்
    தங்குமுசாத் தானத் தனிமுதலே – பொங்குபவ
  173. வல்லலிடும் பாவநத்த மட்டொளிசெய் கின்றதிரு
    மல்லலிடும் பாவனத்து மாட்சிமையே – தொல்லைப்
  174. படிக்குள் நோவாத பண்புடையோர் வாழ்த்தும்
    கடிக்குளத் தன்பர் களிப்பே – கடிக்குளத்தின்
  175. வண்டலைக்கத் தேனலரின் வார்ந்தோர் தடமாக்கும்
    தண்டலைக்குள் நீணெறிச்சிந் தாமணியே – கொண்டலென
  176. மன்கோட்டூர் சோலை வளர்கோட்டூர் தண்பழனத்
    தென்கோட்டூர் தேவ சிகாமணியே – தென்கூட்டிப்
  177. போய்வண் டுறைதடமும் பூம்பொழிலுஞ் சூழ்ந்தமரர்
    ஆய்வெண் டுமறைமாசி லாமணியே – தோய்வுண்ட
  178. கள்ளம்பூ தாதிநிலை கண்டுணர்வு கொண்டவர்சூழ்
    கொள்ளம்பூ தூர்வான் குலமணியே – வெள்ளிடைவான்
  179. வாம்பே ரெயிற்சூழ்ந்த மாண்பாற் றிருநாமம்
    ஆம்பே ரெயிலொப்பி லாமணியே – தாம்பேரா
  180. வீட்டிலன்ப ரானந்தம் மேவச் செயுங்கொள்ளிக்
    காட்டி லமர்ந்தஎன்கண் காட்சியே – நீட்டுமொளி
  181. ஆங்கூ ரிலைவே லவனா தியர்சூழத்
    தேங்கூரில் வாழ்தேவ சிங்கமே – ஓங்குமலை
  182. வல்லிக்கா தார மணிப்புயவென் றன்பர்தொழ
    நெல்லிக்கா வாழ்மெய்ந் நியமமே – எல்அல்கண்
  183. சேட்டியத் தானே தெரிந்துசுரர் வந்தேத்து
    நாட்டியத் தான்குடிவாழ் நல்லினமே – நாட்டுமொரு
  184. நூறாயி லன்பர்தமை நோக்கி யருள்செய்திருக்
    காறாயின் மேலோர் கடைப்பிடியே – வீறாகும்
  185. இன்றாப்பூர் வந்தொட் டிருந்ததிவ்வூ ரென்னவுயர்
    கன்றாப்பூர் பஞ்சாக் கரப்பொருளே – துன்றாசை
  186. வெய்ய வலிவலத்தை வீட்டியன்பர்க் கின்னருள்செய்
    துய்ய வலிவலத்துச் சொன்முடிபே – நையுமன
  187. மைச்சினத்தை விட்டோர் மனத்திற் சுவைகொடுத்துக்
    கைச்சினத்தி னுட்கரையாக் கற்கண்டே – நெற்சுமக்க
  188. ஆளிலையென் றாரூர னார்துதிக்கத் தந்தருளும்
    கோளிலியின் அன்பர்குலங் கொள்ளுவப்பே – நீளுலகம்
  189. காய்மூர்க்க ரேனுங் கருதிற் கதிகொடுக்கும்
    வாய்ழூர்க் கமைந்த மறைக்கொழுந்தே – நேயமுணத்
  190. தேடெலியை மூவுலகுந் தேர்ந்துதொழச் செய்தருளும்
    ஈடின்மறைக் காட்டிலென்றன் எய்ப்பில்வைப்பே – நாடுமெனை
  191. நின்னகத்தி யான்பள்ளி நேர்ந்தேனென் றாட்கொண்ட
    தென்னகத்தி யான்பள்ளிச் செம்பொன்னே – தொன்னெறியோர்
  192. நாடிக் குழக நலமருளென் றேத்துகின்ற
    கோடிக் குழகரருட் கோலமே – நீடுலகில்
  193. நாட்டும் புகழீழ நாட்டிற் பவவிருளை
    வாட்டுந் திருக்கோண மாமலையாய் – வேட்டுலகின்
  194. மூதீச் சரமென்று முன்னோர் வணங்குதிருக்
    கேதீச் சரத்திற் கிளர்கின்றோய் – ஓதுகின்றோர்
  195. பாலவாய் நிற்கும் பரையோடு வாழ்மதுரை
    ஆலவாய்ச் சொக்கழகா னந்தமே – சீலர்தமைக்
  196. காப்பனூ ரில்லாக் கருணையா லென்றுபுகும்
    ஆப்பனூர் மேவுசதா னந்தமே – மாப்புலவர்
  197. ஞானபரங் குன்றமென நண்ணிமகிழ் கூர்ந்தேத்த
    வானபரங் குன்றலின்பா னந்தமே – வானவர்கோன்
  198. தேமே டகத்தனொடு சீதரனும் வாழ்த்துஞ்சீ
    ராமே டகத்தறிவா னந்தமே – பூமீதில்
  199. நற்றவருங் கற்ற நவசித்த ரும்வாழ்த்தி
    உற்றகொடுங் குன்றத்தெம் ஊதியமே – முற்றுகதிர்
  200. இத்தூர மன்றி யினித்தூர மில்லையெனப்
    புத்தூர் வருமடியார் பூரிப்பே – சித்தாய்ந்து
  201. நாமீச ராகும் நலந்தருமென் றும்பர்தொழும்
    ராமீசம்67 வாழ்சீவ ரத்தினமே – பூமீது
  202. நீடானை சூழும் நிலமன்னர் வாழ்த்துதிரு
    வாடானை மேவுகரு ணாகரமே – சேடான
  203. வானப்பே ராற்றை மதியை முடிசூடுங்
    கானப்பேர் ஆனந்தக் காளையே – மோனருளே
  204. பூவணமும் பூமணமும் போலவ மர்ந்ததிருப்
    பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே – தீவணத்தில்
  205. கண்சுழிய லென்று கருணையளித் தென்னுளஞ்சேர்
    தண்சுழியல் வாழ்சீவ சாக்ஷியே – பண்செழிப்பக்
  206. கற்றாலங் குண்மைக் கதிதருமென் றற்றவர்சூழ்
    குற்றாலத் தன்பர் குதுகலிப்பே – பொற்றாம
  207. நல்வேலி சூழ்ந்து நயன்பெறுமொண் செஞ்சாலி
    நெல்வேலி உண்மை நிலயமே – வல்வேலை
  208. நஞ்சைக் களத்துவைத்த நாதவெனத் தொண்டர்தொழ
    அஞ்சைக் களஞ்சேர் அருவுருவே – நெஞ்சடக்கி
  209. ஆன்று நிறைந்தோர்க் கருளளிக்கும் புக்கொளியூர்த்
    தோன்றுமவி நாசிச் சுயம்புவே – சான்றவர்கள்
  210. தம்முருகன் பூணுட் டலம்போல வாழ்கின்ற
    எம்முருகன் பூண்டி இருநிதியே – செம்மையுடன்
  211. அங்குன்றா தோங்கு மணிகொள் கொடிமாடச்
    செங்குன்றூர் வாழுஞ்சஞ் சீவியே – தங்குமன
  212. வஞ்சமாக் கூடல் வரையா தவர்சூழும்
    வெஞ்சமாக் கூடல் விரிசுடரே – துஞ்சலெனும்
  213. இன்ன லகற்ற இலங்குபவா னிக்கூடல்
    என்னு நணாவினிடை இன்னிசையே – துன்னியருள்
  214. வேண்டிக் கொடுமுடியா மேன்மைபெறு மாதவர்சூழ்
    பாண்டிக் கொடுமுடியிற் பண்மயமே – தீண்டரிய
  215. வெங்கருவூர் வஞ்ச வினைதீர்த் தவர்சூழ்ந்த
    நங்கருவூர்ச் செய்யுள் நவரசமே – தங்களற்றின்
  216. தீங்கார் பிறதெய்வத் தீங்குழியில்70 வீழ்ந்தவரைத்
    தாங்கா வரத்துறையில் தாணுவே – பூங்குழலார்
  217. வீங்கானை மாடஞ்சேர் விண்ணென் றகல்கடந்தைத்
    தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே – நீங்காது
  218. நீடலை யாற்றூர் நிழன்மணிக்குன் றோங்குதிருக்
    கூடலை யாற்றூர்க் குணநிதியே – நாடியவான்
  219. அம்புலியூர் சோலை யணிவயல்க ளோங்கெருக்கத்
    தம்புலியூர் வேத சமரசமே – நம்புவிடை
  220. ஆங்குந் தினையூர்ந் தருளாயென் றன்பர்தொழு
    தோங்குந் தினையூர் உமாபதியே – தீங்குறுமொன்
  221. னார்புரத்தை72 வெண்ணகைத்தீ யாலழித்தா யென்றுதொழச்
    சோபுரத்தின்73 வாழ்ஞான தீவகமே – வார்கெடிலச்
  222. சென்னதிகை யோங்கித்74 திலதவதி யார்பரவும்
    மன்னதிகை வீரட்ட மாதவமே – பன்னரிதாம்
  223. ஆவலூ ரெங்களுடை ஆரூர னாரூரா
    நாவலூர் ஞானியருண் ஞாபகமே – தேவகமாம்
  224. மன்ற மமர்ந்த வளம்போற் றிகழ்ந்தமுது
    குன்ற மமர்ந்தஅருட் கொள்கையே – அன்றகத்தின்
  225. நல்வெண்ணெ யுண்டொளித்த நாரணன்வந் தேத்துகின்ற
    நெல்வெண்ணெய் மேவுசிவ நிட்டையே – சொல்வண்ணம்
  226. நாவலர் போற்றி நலம்பெறவே யோங்குதிருக்
    கோவலூர் வீரட்டங் கொள்பரிசே – ஆவலர்மா
  227. தேவா இறைவா சிவனே யெனுமுழக்கம்
    ஓவா அறையணிநல் லூருயர்வே – தாவாக்
  228. கடையாற்றி னன்பர்தமைக் கல்லாற்றி னீக்கும்
    இடையாற்றின் வாழ்நல் இயல்பே – இடையாது
  229. சொல்லூரன் றன்னைத் தொழும்புகொளுஞ் சீர்வெண்ணெய்
    நல்லூ ரருட்டுறையின் நற்பயனே – மல்லார்ந்து
  230. மாசுந் துறையூர் மகிபன்முதல் மூவருஞ்சீர்
    பேசுந் துறையூர்ப் பிறைசூடீ – நேசமுற
  231. வேற்றா வடுகூ ரிதயத்தி னார்க்கென்றுந்
    தோற்றா வடுகூர்ச் சுயஞ்சுடரே – ஆற்றமயல்
  232. காணிக் குழிவீழ் கடையர்க்குக் காண்பரிய
    மாணிக் குழிவாழ் மகத்துவமே – மாணுற்ற
  233. பூப்பா திரிகொன்றை புன்னைமுதற் சூழ்ந்திலங்கும்
    ஏர்ப்பா75 திரிப்புலியூர் ஏந்தலே – சீர்ப்பொலியப்
  234. பண்டீச் சுரனிப் பதியே விழைந்ததெனும்
    முண்டீச் சுரத்தின் முழுமுதலே – பெண்தகையார்
  235. ஏர்ப்பனங்காட் டூரென் றிருநிலத்தோர் வாழ்த்துகின்ற
    சீர்ப்பனங்காட் டூர்மகிழ்நி க்ஷேபமே – சூர்ப்புடைத்த
  236. தாமாத்தூர் வீழத் தடிந்தோன் கணேசனொடும்
    ஆமாத்தூர் வாழ்மெய் அருட்பிழம்பே – யாமேத்தும்
  237. உண்ணா முலையாள் உமையோடு மேவுதிரு
    அண்ணா மலைவாழ் அருட்சுடரே – கண்ணார்ந்த
  238. நாகம்ப ராந்தொண்ட நாட்டி லுயர்காஞ்சி
    ஏகம்ப மேவும்பே ரின்பமே – ஆகுந்தென்
  239. காற்றளிவண் பூமணத்தைக் காட்டும் பொழிற்கச்சி
    மேற்றளிவாழ் ஆனந்த வீட்டுறவே – நாற்றமலர்ப்
  240. பூந்தண் டளிவிரித்துப் புக்கிசைக்குஞ் சீரோண
    காந்தன் றளிஅருட்ப்ர காசமே – சேர்ந்தவர்க்கே
  241. இங்கா பதஞ்சற்று மில்லா தவனேக
    தங்கா பதஞ்சேர் தயாநிதியே – மங்காது
  242. மெச்சி நெறிக்கார்வ மேவிநின்றோர் சூழ்ந்ததிருக்
    கச்சி நெறிக்காரைக் காட்டிறையே – முச்சகமும்
  243. ஆயுங் குரங்கணின்முட் டப்பெயர்கொண் டோங்குபுகழ்
    ஏயுந் தலம்வா ழியன்மொழியே – தோயுமன
  244. யோகறலி77 லாத்தவத்தோ ருன்ன விளங்குதிரு
    மாகறலில் அன்பரபி மானமே – ஓகையிலா
  245. வீத்தூர78 மாவோட மெய்த்தவர்கள் சூழ்ந்ததிரு
    ஓத்தூரில் வேதாந்த உண்மையே – பூத்தவிசின்
  246. ஆர்த்தான் பனகத் தவனிந் திரன்புகழ்வன்
    பார்த்தான் பனங்காட்டூர் பாக்கியமே – பார்த்துலகில்
  247. இல்ல மெனச்சென் றிரவா தவர்வாழும்
    வல்லமகி ழன்பர் வசித்துவமே – சொல்லரிக்குக்
  248. காற்பேறு கச்சியின்முக் காற்பே றிவணென்னும்
    மாற்பேற்றி னன்பர் மனோபலமே – ஏற்புடைவாய்
  249. ஊற லடியா ருறத்தொழுது மேவுதிரு
    ஊற லழியா உவகையே – மாறுபடு
  250. தீது மிலம்பயங்கோட் டீரென் றடியர்புகழ்
    ஓது மிலம்பயங்கோட் டூர்நலமே – தீதுடைய
  251. பொற்கோலம் ஆமெயிற்குப் போர்க்கோலம் கொண்டதிரு
    விற்கோலம் மேவுபர மேட்டிமையே – சொற்போரில்
  252. ஓலங்காட் டும்பழைய னூர்நீலி வாதடக்கும்
    ஆலங்காட் டிற்சூழ் அருள்மயமே – ஞாலம்சேர்
  253. மாசூர் அகற்றும் மதியுடையோர் சூழ்ந்ததிருப்
    பாசூரில் உண்மைப் பரத்துவமே – தேசூரன்
  254. கண்பார்க்க வேண்டுமெனக் கண்டூன்று கோற்கொடுத்த
    வெண்பாக்கத் தன்பர்பெறும் வீறாப்பே – பண்பார்க்கு
  255. நள்ளிப் பதியே நலந்தருமென் றன்பர்புகுங்
    கள்ளிற் பதிநங் கடப்பாடே – எள்ளலுறுங்
  256. கோளத்தி நீக்குங் குணத்தோர்க் கருள்செய்திருக்
    காளத்தி ஞானக் களஞ்சியமே – ஆள்அத்தா
  257. வெற்றியூ ரென்ன வினையேன் வினைதவிர்த்த
    ஒற்றியூர் மேவியஎன் உள்ளன்பே – தெற்றிகளில்
  258. பொங்குமணிக் கால்கள் பொலஞ்செய்திரு வொற்றிநகர்
    தங்குஞ் சிவபோக சாரமே – புங்கவர்கள்
  259. சேர்ந்துவலங் கொள்ளுந் திருவொற்றி யூர்க்கோயிற்
    சார்ந்து மகிழ்அமுத சாரமே – தேர்ந்துலகர்
  260. போற்றுந் திருவொற்றிப் பூங்கோயிற் குட்பெரியோர்
    சாற்றும் புகழ்வேத சாரமே – ஊற்றுறுமெய்
  261. அன்புமிகுந் தொண்டர்குழு ஆயும்வலி தாயத்தில்
    இன்பமிகு ஞான இலக்கணமே – துன்பமற
  262. எல்லைவாயற் குள்மட்டும் ஏகில்வினை யேகுமெனும்
    முல்லைவாயிற் குள்வைத்த முத்திவித்தே – மல்லல்பெறு
  263. வேற்காட்ட ரேத்துதிரு வேற்காட்டின் மேவியமுன்
    நூற்காட் டுயர்வேத நுட்பமே – பாற்காட்டும்
  264. ஆர்த்திபெற்ற மாதுமயி லாய்ப்பூசித் தார்மயிலைக்
    கீர்த்திபெற்ற நல்வேத கீதமே – கார்த்திரண்டு
  265. வாவுகின்ற சோலை வளர்வான்மி யூர்த்தலத்தில்
    மேவுகின்ற ஞான விதரணமே – தூவிமயில்
  266. ஆடும் பொழிற்கச்சூ ராலக்கோ யிற்குளன்பர்
    நீடுங் கனதூய நேயமே – ஈடில்லை
  267. என்னுந் திருத்தொண்ட ரேத்து மிடைச்சுரத்தின்
    மன்னுஞ் சிவானந்த வண்ணமே – நன்னெறியோர்
  268. துன்னுநெறிக் கோர்துணையாந் தூயகழுக் குன்றினிடை
    முன்னுமறி வானந்த மூர்த்தமே – துன்னுபொழில்
  269. அம்மதுரத் தேன்பொழியும் அச்சிறுபாக் கத்துலகர்
    தம்மதநீக் குஞ்ஞான சம்மதமே – எம்மதமும்
  270. சார்ந்தால் வினைநீக்கித் தாங்குதிரு வக்கரையுள்
    நேர்ந்தார் உபநிடத நிச்சயமே – தேர்ந்தவர்கள்
  271. தத்த மதுமதியாற் சாரும் அரசிலியூர்
    உத்தமமெய்ஞ் ஞான ஒழுக்கமே – பத்தியுள்ளோர்
  272. எண்ணும் புகழ்கொள் இரும்பைமா காளத்து
    நண்ணுஞ் சிவயோக நாட்டமே – மண்ணகத்துள்
  273. கோபலத்திற் காண்பரிய கோகரணங் கோயில்கொண்ட
    மாபலத்து மாபலமா மாபலமே – தாபமிலாப்
  274. பாகியற்சொல் மங்கையொடும் பாங்கார் பருப்பதத்தில்
    யோகியர்க ளேத்திடவாழ் ஒப்புரவே – போகிமுதல்
  275. பாடியுற்ற நீலப் பருப்பதத்தில் நல்லோர்கள்
    தேடிவைத்த தெய்வத் திலகமே – நீடுபவம்
  276. தங்கா தவனேக தங்கா பதஞ்சேர்ந்த
    நங்கா தலான நயப்புணர்வே – சிங்காது8
  277. தண்ணிறைந்து நின்றவர்தாஞ் சார்திருக்கே தாரத்திற்
    பண்ணிறைந்த கீதப் பனுவலே – எண்ணிறைந்த
  278. சான்றோர் வணங்குநொடித் தான்மலையில் வாழ்கின்ற
    தேன்றோய் அமுதச் செழுஞ்சுவையே – வான்தோய்ந்த
  279. இந்திரரும் நாரணரும் எண்ணில் பிரமர்களும்
    வந்திறைஞ்சும் வெள்ளி மலையானே – தந்திடுநல்
  280. தாய்க்குங் கிடையாத தண்ணருள்கொண் டன்பருளம்
    வாய்க்குங் கயிலை மலையானே – தூய்க்குமரன்
  281. தந்தையே என்னருமைத் தந்தையே தாயேயென்
    சிந்தையே கோயில்கொண்ட தீர்த்தனே – சந்தமிகும்
  282. எண்டோ ளுடையாய் எனையுடையாய் மார்பகத்தில்
    வண்டோ லிடுங்கொன்றை மாலையாய் – தொண்டர்விழி
  283. உண்ணற் கெளியாய் உருத்திரன்மா லாதியர்தங்
    கண்ணிற் கனவினிலுங் காண்பரியாய் – மண்ணுலகில்
  284. என்போன் றவர்க்கும் இருள்நீக்கி இன்புதவும்
    பொன்போன்ற மேனிப் புராதனனே – மின்போன்ற
  285. செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கு மியாவருக்கும்
    அஞ்சடையா வண்ணம் அளிப்போனே – விஞ்சுலகில்
  286. எல்லார்க்கு நல்லவனே எல்லாஞ்செய் வல்லவனே
    எல்லார்க்கும் ஒன்றா யிருப்போனே – தொல்லூழி
  287. ஆர்ந்த சராசரங்க ளெல்லா மடிநிழலில்
    சேர்ந்தொடுங்க மாநடனஞ் செய்வோனே – சார்ந்துலகில்
  288. எத்தேவர் மெய்த்தேவ ரென்றுரைக்கப் பட்டவர்கள்
    அத்தேவர்க் கெல்லாமுன் னானோனே – சத்தான
  289. வெண்மைமுதல் ஐவணமு மேவிஐந்து தேவர்களாய்த்
    திண்மைபெறும் ஐந்தொழிலுஞ் செய்வோனே – மண்முதலாம்
  290. ஐந்தா யிருசுடரா யான்மாவாய் நாதமுடன்
    விந்தா கியெங்கும் விரிந்தோனே – அந்தணவெண்
  291. நீறுடையா யாறுடைய நீண்முடியாய் நேடரிய
    வீறுடையாய் நின்றனக்கோர் விண்ணப்பம் – மாறுபட
  292. எள்ள லடியேன் எனக்குள் ஒளியாமல்
    உள்ள படியே யுரைக்கின்றேன் – விள்ளுறுமியான்
  293. வன்சொ லுடன்அன்றி வள்ளலுன தன்பர்தமக்
    கின்சொ லுடன்பணிந்தொன் றீந்ததிலை – புன்சொலெனும்
  294. பொய்யுரைக்க வென்றாற் புடையெழுவேன் அன்றியொரு
    மெய்யுரைக்க வென்றும் விழைந்ததிலை – வையகத்தில்
  295. பொல்லா விரதத்தைப் போற்றியுவந் துண்பதல்லால்
    கொல்லா விரதத்தைக் கொண்டதிலை – அல்லாதார்
  296. வன்புகழைக் கேட்க மனங்கொண்ட தல்லாமல்
    நின்புகழைக் கேட்க நினைந்ததிலை – வன்புகொண்டே
  297. இன்னடிக்கு நுண்ணிடையார்க் கேவல்புரிந் தேனலதுன்
    பொன்னடிக்குத் தொண்டு புரிந்ததிலை – பன்னுகின்ற
  298. செக்குற்ற எள்ளெனவே சிந்தைநசிந் தேனலது
    முக்குற்றந் தன்னை முறித்ததிலை – துக்கமிகுந்
  299. தாவில் வலங்கொண்டு சஞ்சரித்தேன் அல்லதுநின்
    கோவில்வலங் கொள்ளக் குறித்தநிலை – பூவுலகில்
  300. வன்னிதியோர் முன்கூப்பி வாழ்த்தினேன் அன்றியுன்றன்
    சன்னிதியிற் கைகூப்பித் தாழ்ந்ததிலை – புன்னெறிசேர்
  301. மிண்டரொடு கூடி வியந்ததல்லா லையாநின்
    தொண்ட ரொடுங்கூடிச் சூழ்ந்ததிலை – கண்டவரைக்
  302. கன்றுமுகங் கொண்டு கடுகடுத்துப் பார்ப்பதல்லால்
    என்று முகமலர்ச்சி யேற்றதிலை – நன்றுபெறு
  303. நன்னெஞ்ச ருன்சீர் நவில வதுகேட்டுக்
    கன்னெஞ்சைச் சற்றுங் கரைத்ததிலை – பின்னெஞ்சாப்
  304. பண்­ர்மை கொண்டதமிழ்ப் பாமாலை யாற்றுதித்துக்
    கண்­ர்கொண் டுன்பாற் கனிந்ததிலை – தண்­ர்போல்
  305. நெஞ்சம் உருகி நினைக்குமன்பர் போலெனைநீ
    அஞ்சலென நின்றாள் அடுத்தநிலை – விஞ்சுலகர்
  306. மெய்யடிய னென்றுரைக்க வித்தகநின் பொன்னடிக்குப்
    பொய்யடிமை வேடங்கள் பூண்டதுண்டு – நையமிகு
  307. மையல் வினைக்குவந்த மாதர் புணர்ச்சியெனும்
    வெய்ய வினைக்குழியில் வீழ்ந்ததுண்டு – துய்யர்தமை
  308. என்னொன்று மில்லா தியல்பாகப் பின்னொன்று
    முன்னொன்று மாக மொழிந்ததுண்டு – மன்னுகின்ற
  309. மானஞ் செயாது மனநொந் திரப்போர்க்குத்
    தானஞ்செய் வாரைத் தடுத்ததுண்டு – ஈனமிலா
  310. வாரமுரை யாது வழக்கி னிடையோர
    வார முரைத்தே மலைந்ததுண்டு – ஈரமிலா
  311. நெஞ்ச ருடன்கூடி நேசஞ்செய் தும்மடியே
    தஞ்சமெனத் தாழாது தாழ்ந்ததுண்டு – எஞ்சலிலாத்
  312. தாயனையா யுன்றனது சந்நிதிநேர் வந்துமொரு
    நேயமுமில் லாதொதி82 போல் நின்றதுண்டு – தீயவினை
  313. மாளாக் கொடிய மனச்செல்வர் வாயிலிற்போய்க்
    கேளாச் சிவநிந்தை கேட்டதுண்டு – மீளாத
  314. பொல்லாப் புலையரைப்போற் புண்ணியரை வன்மதத்தால்
    சொல்லா வசையெல்லாஞ் சொன்னதுண்டு – நல்லோரைப்
  315. போற்றாது பொய்யுடம்பைப் போற்றிச் சிவபூசை
    ஆற்றாது சோற்றுக் கலைந்ததுண்டு – தேற்றாமல்
  316. ஈபத்தா என்றிங் கிரப்போர் தமைக்கண்டு
    கோபத்தால் நாய்போற் குரைத்ததுண்டு – பாபத்தால்
  317. சிந்தையொன்று வாக்கொன்று செய்கையொன்றாய்ப் போகவிட்டே
    எந்தைநினை யேத்தா திருந்ததுண்டு – புந்தியிந்த
  318. சொல்லைக்கல் லென்றுநல்லோர் சொன்னபுத்தி கேளாமல்
    எல்லைக்கல் லொத்தே யிருந்ததுண்டு – தொல்லைவினை
  319. ஆழ்த்தா மயவுலகி லற்ப மகிழ்ச்சியினால்
    வாழ்த்தாம லுன்னை மறந்ததுண்டு – தாழ்த்தாமற்
  320. பூணா வெலும்பணியாய்ப் பூண்டோய்நின் பொன்வடிவங்
    காணாது வீழ்நாள் கழித்ததுண்டு – மாணாத
  321. காடுபோன் ஞாலக் கடுநடையி லேயிருகான்
    மாடுபோல் நின்றுழைத்து வாழ்ந்ததுண்டு – நாடகன்ற
  322. கள்ளிவா யோங்குபெருங் காமக் கடுங்காட்டிற்
    கொள்ளிவாய்ப் பேய்போற் குதித்ததுண்டு – ஒள்ளியரால்
  323. எள்ளுண்ட மாயா இயல்புறுபுன் கல்வியெலாங்
    கள்ளுண்ட பித்தனைப்போற் கற்றதுண்டு – நள்ளுலகில்
  324. சீராசை யெங்குஞ்சொற் சென்றிடவே வேண்டுமெனும்
    பேராசைப் பேய்தான் பிடித்ததுண்டு – தீராவென்
  325. சாதகமோ தீவினையின் சாதனையோ நானறியேன்
    பாதகமென் றாலெனக்குப் பாற்சோறு – தீதகன்ற
  326. தூய்மைநன்றா மென்கின்ற தொன்மையினார் வாய்க்கினிய
    வாய்மையென்றால் என்னுடைய வாய்குமட்டுங் – காய்மைதரும்
  327. கற்கு நிகராங் கடுஞ்சொலன்றி நன்மதுரச்
    சொற்கும் எனக்கும்வெகு தூரங்காண் – பொற்புமிக
  328. நண்ணியுனைப் போற்றுகின்ற நல்லோர்க் கினியசிவ
    புண்ணியமென் றாலெனக்குப் போராட்டம் – அண்ணலுனை
  329. நாளுரையா தேத்துகின்ற நல்லோர்மேல் இல்லாத
    கோளுரையென் றாலெனக்குக் கொண்டாட்டம் – நீளநினை
  330. நேசிக்கு நல்ல நெறியாஞ் சிவாகமநு‘ல்
    வாசிக்க வென்றாலென் வாய்நோகுங் – காசிக்கு
  331. நீடிக்கி லானாலு நேர்ந்தறிவ தல்லதுவீண்
    வேடிக்கை யென்றால் விடுவதிலை – நாடயலில்
  332. வீறா முனது விழாச்செயினும் அவ்விடந்தான்
    ஆறா யிரங்காத மாங்கண்டாய் – மாறான
  333. போகமென்றா லுள்ளமிகப் பூரிக்கும் அன்றிசிவ
    யோகமென்றா லென்னுடைய உண்ணடுங்கும் – சோகமுடன்
  334. துள்ளலொழிந் தென்னெஞ்சஞ் சோர்ந்தழியுங் காலத்திற்
    கள்ளமென்றா லுள்ளே களித்தெழும்பும் – அள்ளனெறி
  335. செல்லென்றால் அன்றிச் சிவசிவா வென்றொருகால்
    சொல்லென்றால் என்றனக்குத் துக்கம்வரும் – நல்லநெறி
  336. வாம்பலன்கொண் டோர்கள் மறந்தும் பெறாக்கொடிய
    சோம்பலென்ப தென்னுடைய சொந்தங்காண் – ஏம்பலுடன்
  337. எற்றோ இரக்கமென்ப தென்றனைக்கண் டஞ்சியெனை
    உற்றோ ரையுமுடன்விட் டோடுங்காண் – சற்றேனும்
  338. ஆக்கமே சேரா தறத்துரத்து கின்றவெறுந்
    தூக்கமே யென்றனக்குச் சோபனங்காண் – ஊக்கமிகும்
  339. ஏறுடையாய் நீறணியா ஈனர்மனை யாயினும்வெண்
    சோறுகிடைத் தாலதுவே சொர்க்கங்காண் – வீறுகின்ற
  340. வாழ்வுரைக்கு நல்ல மனத்தர்தமை யெஞ்ஞான்றுந்
    தாழ்வுரைத்தல் என்னுடைய சாதகங்காண் – வேள்விசெயுந்
  341. தொண்டர் தமைத்துதியாத் துட்டரைப்போ லெப்பொழுதுஞ்
    சண்டையென்ப தென்றனக்குத் தாய்தந்தை – கொண்டஎழு
  342. தாதாட ஓங்கித் தலையாட வஞ்சரொடு
    வாதாட என்றாலென் வாய்துடிக்குங் – கோதாடச்
  343. சிந்தை திரிந்துழலுந் தீயரைப்போல் நற்றரும
    நிந்தையென்ப தென்பழைய நேசங்காண் – முந்தநினை
  344. எண்ணென்றால் அன்றி யிடர்செய் திடுங்கொடிய
    பெண்ணென்றால் தூக்கம் பிடியாது – பெண்களுடன்
  345. புல்லென்றால் தேகம் புளகிக்கும் அன்றிவிட்டு
    நில்லென்றால் என்கண்ணி னீரரும்பும் – புல்லரென்ற
  346. பேர்க்கும்விருப் பெய்தாத பெண்பேய்கள் வெய்யசிறு
    நீர்க்குழியே யான்குளிக்கு நீர்ப்பொய்கை – சீர்க்கரையின்
  347. ஏறாப்பெண் மாத ரிடைக்கு ளளிந்தென்றும்
    ஆறாப்புண் ணுக்கே யடிமைநான் – தேறாத
  348. வெஞ்சலஞ்செய் மாயா விகாரத்தி னால்வரும்வீண்
    சஞ்சலமெல்லா மெனது சம்பந்தம் – அஞ்செழுத்தை
  349. நேர்ந்தார்க் கருள்புரியு நின்னடியர் தாமேயுஞ்
    சார்ந்தா லதுபெரிய சங்கட்டம் – ஆர்ந்திடுமான்
  350. காந்தும் விழிப்புலியைக் கண்டதுபோல் நல்லகுண
    சாந்த மெனைக் கண்டால் தலைசாய்க்கும் – ஆந்தகையோர்
  351. சேர மனத்திற் செறிவித் திடும்புருட
    தீரமெனைக் கண்டாற் சிரிக்குங்காண் – கோரமதைக்
  352. காணி லுலகிற் கருத்துடையோர் கொள்ளுகின்ற
    நாண மெனைக்கண்டு நாணுங்காண் – ஏணுலகில்
  353. ஞானங் கொளாவெனது நாமமுரைத் தாலுமபி
    மானம் பயங்கொண்டு மாய்ந்துவிடும் – ஆனவுன்றன்
  354. கேண்மைக் குலத்தொண்டர் கீர்த்தி பெறக்கொண்ட
    ஆண்மைக்கு நானென்றா லாகாது – வாண்மைபெறும்
  355. ஐயநின்றாட் பூசிக்கு மன்பருள்ளத் தன்பிற்கும்
    பொய்ய னெனக்கும் பொருத்தமிலை – வையகத்தோர்
  356. இல்லெனினுஞ் சும்மாநீ யீகின்றே னென்றொருசொல்
    சொல்லெனினுஞ் சொல்லத் துணிவுகொளேன் – நல்லையெமக்
  357. கீயென்பா ரன்றியன்னை யென்பயத்தா னின்சோற்றில்
    ஈயென்ப தற்கு மிசையாள்காண் – ஈயென்பார்க்
  358. கெண்ணுஞ் சிலர்மண் ணிடுவா ரெனக்கந்த
    மண்ணுங் கொடுக்கமனம் வாராது – அண்ணுறுமென்
  359. இல்லை யடைந்தே யிரப்பவருக் கெப்போதும்
    இல்லையென்ப தென்வாய்க் கியல்புகாண் – தொல்லுலகை
  360. ஆண்டாலு மன்றி அயலார்புன் கீரைமணிப்
    பூண்டாலு மென்கண் பொறுக்காது – நீண்டஎழு
  361. தீப முறுவோர் திசையோர்மற் றியாவர்க்குங்
    கோப மதுநான் கொடுக்கிலுண்டு – ஆபத்தில்
  362. வீசங் கொடுத்தெட்டு வீச மெனப்பிறரை
    மோசஞ் செயநான் முதற்பாதம் – பாசமுளோர்
  363. கைக்குடைய வேயெழுதிக் கட்டிவைத்த இவ்வுலகப்
    பொய்க்கதையே யான்படிக்கும் புத்தகங்கள் – மெய்ப்படுநின்
  364. மந்திரத்தை உச்சரியா வாயுடையேன் என்போலத்
    தந்திரத்தில் கைதேர்ந் தவரில்லை – எந்தைஇனி
  365. ஏதென் றுரைப்பே னிருங்கடல்சூழ் வையகத்தில்
    சூதென்ப தெல்லாமென் சுற்றங்காண் – ஓதுகின்ற
  366. நஞ்சமெலாங் கூட்டி நவின்றிடினும் ஒவ்வாத
    வஞ்சமெலா மென்கை வசங்கண்டாய் – அஞ்சவரும்
  367. வீணவமாம் வஞ்ச வினைக்குமுத லாகிநின்ற
    ஆணவமே என்காணி ஆட்சியதாம் – மாணிறைந்த
  368. நல்லறிவே என்னைநெடு நாட்பகைத்த தன்றிமற்றைப்
    புல்லறிவே என்னுட் பொருள்கண்டாய் – சொல்லவொணா
  369. வேடருக்குங் கிட்டாத வெங்குணத்தா லிங்குழலும்
    மூடருக்குள் யானே முதல்வன்காண் – வீடடுத்த
  370. மேதையர்கள் வேண்டா விலங்காய்த் திரிகின்ற
    பேதையென்ப தென்னுரிமைப் பேர்கண்டாய் – பேதமுற
  371. ஓதுவதென் பற்பலவாய் உற்றதவத் தோர்நீத்த
    தீதுகளெல் லாமெனது செல்வங்காண் – ஆதலினால்
  372. பேயினையொத் திவ்வுலகில் பித்தாகி நின்றவிந்த
    நாயினைநீ ஆண்டிடுதல் நன்கன்றே – ஆயினுமுன்
  373. மண்ணா ருயிர்களுக்கும் வானவர்க்குந் தானிரங்கி
    உண்ணாக் கொடுவிடமும் உண்டனையே – எண்ணாமல்
  374. வேய்த்தவள வெற்பெடுத்த வெய்யஅரக் கன்தனக்கும்
    வாய்த்தவர மெல்லாம் வழங்கினையே – சாய்த்தமன
  375. வீம்புடைய வன்முனிவர் வேள்விசெய்து விட்டகொடும்
    பாம்பையெல் லாந்தோளிற் பரித்தனையே – நாம்பெரியர்
  376. எஞ்சேமென் றாணவத்தா லேற்ற இருவரையும்
    அஞ்சேலென் றாட்கொண் டருளினையே – துஞ்சுபன்றித்
  377. தோயாக் குருளைகளின் துன்பம் பொறாதன்று
    தாயாய் முலைப்பாலுந் தந்தனையே – வாயிசைக்குப்
  378. பாண்டியன்முன் சொல்லிவந்த பாணன் பொருட்டடிமை
    வேண்டி விறகெடுத்து விற்றனையே – ஆண்டொருநாள்
  379. வாய்முடியாத் துன்புகொண்ட வந்திக்கோ ராளாகித்
    தூய்முடிமேல் மண்ணுஞ் சுமந்தனையே – ஆய்துயர
  380. மாவகஞ்சேர் மாணிக்க வாசகருக் காய்க்குதிரைச்
    சேவகன்போல் வீதிதனில் சென்றனையே – மாவிசயன்
  381. வில்லடிக்கு நெஞ்சம் விரும்பியதல் லால்எறிந்த
    கல்லடிக்கும் உள்ளங் களித்தனையே – மல்லலுறும்
  382. வில்வக் கிளையுதிர்த்த வெய்ய முசுக்கலையைச்
    செல்வத் துரைமகனாய்ச் செய்தனையே – சொல்லகலின்
  383. நீளுகின்ற நெய்யருந்த நேரெலியை மூவுலகும்
    ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே – கோளகல
  384. வாய்ச்சங்கு நூலிழைத்த வாய்ச்சிலம்பி தன்னைஉயர்
    கோச்செங்கட் சோழனெனக் கூட்டினையே – ஏச்சறுநல்
  385. ஆறடுத்த83 வாகீசர்க் காம்பசியைக் கண்டுகட்டுச்
    சோறெடுத்துப் பின்னே சுமந்தனையே – கூறுகின்ற
  386. தொன்மைபெருஞ் சுந்தரர்க்குத் தோழனென்று பெண்பரவை
    நன்மனைக்குத் தூது நடந்தனையே – நன்மைபெற
  387. இற்றென்ற இற்றென்னா எத்தனையோ பேர்கள்செய்த
    குற்றங் குணமாகக் கொண்டனையே – பற்றுலகில்
  388. அன்புடைய தாயர்களோ ராயிரம்பே ரானாலும்
    அன்புடையாய் நின்னைப்போ லாவாரோ – இன்பமுடன்
  389. ஈண்டவரும் தந்தையர்கள் எண்ணிலரே ஆயினுமென்
    ஆண்டவனே நின்னைப்போ லாவாரோ – பூண்டகைகொள்
  390. ஏணுடைய நின்னையன்றி எந்தை பிரானேஉன்
    ஆணைஎனக் குற்றதுணை யாருமில்லை – நாணமுளன்
  391. ஆனேன் பிழைக ளனைத்தினையு மையாநீ
    தானே பொறுக்கத் தகுங்கண்டாய் – மேல்நோற்ற
  392. மாற்றனுக்கு மெட்டா மலர்க்கழலோய் நீயென்னைக்
    கூற்றனுக்குக் காட்டிக் கொடுக்கற்க – பாற்றவள
  393. நந்தக் கடற்புவியில் நானின்னும் வன்பிறவிப்
    பந்தக் கடலழுந்தப் பண்ணற்க – முந்தைநெறி
  394. நின்றேயுன் பொற்றாள் நினையாதார் பாழ்மனையில்
    சென்றே உடலோம்பச் செய்யற்க – நன்றேநின்
  395. றோங்கு நெறியோர் உளத்தமர்ந்தோய் என்றன்னைத்
    தீங்கு நெறியில் செலுத்தற்க – வீங்கடங்கி
  396. வாழி யெனத்தான் வழுத்தினுமென் சொற்கடங்கா
    ஏழை மனத்தா லிளைக்கின்றேன் – வாழுமரக்
  397. கோடேறும் பொல்லாக் குரங்கெனவே பொய்யுலகக்
    காடேறு நெஞ்சாற் கலங்குகின்றேன் – பாடேறும்
  398. உள்ளறியா மாயையெனு முட்பகையார் காமமெனுங்
    கள்ளறியா துண்டு கவல்கின்றேன் – தெள்ளுறுமென்
  399. கண்ணனையாய் நின்தாள் கமலங் களைவழுத்தா
    மண்ணனையார் பாற்போய் மயங்குகின்றேன் – திண்ணமிலாக்
  400. காதரவாந் துன்பக் கவலைக் கடல்வீழ்ந்தே
    ஆதரவொன் றின்றி அலைகின்றேன் – ஓதுமறை
  401. ஆத்த ரெனுமுன் அடியார் தமைக்கண்டு
    நாத்திகஞ்சொல் வார்க்கு நடுங்குகின்றேன் – பாத்துண்டே
  402. உய்வ தறியா உளத்தினே னுய்யும்வகை
    செய்வ தறியேன் திகைக்கின்றேன் – சைவநெறி
  403. உண்ணிரம்பு நின்கருணை உண்டோ இலையோஎன்
    றெண்ணியெண்ணி உள்ளம் இளைக்கின்றேன் – மண்ணினிடைக்
  404. கொன்செய்கை கொண்டகொடுங் கூற்றன் குறுகிலதற்
    கென்செய்வோ மென்றெண்ணி எய்க்கின்றேன் – முன்செய்வினை
  405. ஆமறையா நோயா லகமெலிவுற் றையோநான்
    தாமரையி னீர்போல் தயங்குகின்றேன் – தாமமுடி
  406. வள்ளல் அருள்கொடுக்க வந்திலனே இன்னுமென
    உள்ளமது நீரா யுருகுகின்றேன் – எள்ளலுறு
  407. மாலைபாய்ந் தின்னுமென்ன வந்திடுமோ என்றுநெஞ்சம்
    ஆலைபாய்ந் துள்ளம் அழிகின்றேன் – ஞாலமிசைக்
  408. கோட்பார வாழ்க்கைக் கொடுஞ்சிறையி னின்றென்னை
    மீட்பா ரிலாது விழிக்கின்றேன் – மீட்பாகும்
  409. ஆற்றி லொருகாலும் அடங்காச் சமுசாரச்
    சேற்றிலொரு காலும்வைத்துத் தேய்கின்றேன் – தோற்றுமயற்
  410. பாகமுறு வாழ்க்கையெனும் பாலைவனத் துன்னருள்நீர்த்
    தாகமது கொண்டே தவிக்கின்றேன் – மோகமதில்
  411. போய்ப்படுமோர் பஞ்சப் பொறிகளால் வெம்பாம்பின்
    வாய்ப்படுமோர் தேரையைப்போல் வாடுகின்றேன் – மாய்ப்பவரு
  412. மீன்போலு மாதர் விழியால் வலைப்பட்ட
    மான்போலுஞ் சோர்ந்து மடங்குகின்றேன் – கான்போல
  413. வீற்று முலக விகாரப் பிரளயத்தில்
    தோற்றுஞ் சுழியுட் சுழல்கின்றேன் – ஆற்றவுநான்
  414. இப்பாரில் உன்மேலன் பில்லெனினும் அன்பனென
    ஒப்பாரி யேனும் உடையேன்காண் – தப்பாய்ந்த
  415. மட்டுவிடேன் உன்தாள் மறக்கினும்வெண்ணீற்றுநெறி
    விட்டுவிடேன் என்றனைக்கை விட்டுவிடேல் – துட்டனென
  416. மாலுந் திசைமுகனும் வானவரும் வந்துதடுத்
    தாலுஞ் சிறியேனைத் தள்ளிவிடேல்- சாலுலக
  417. வாதனைகொண் டோனென்று மற்றெவரா னாலும்வந்து
    போதனைசெய் தாலுமெனைப் போக்கிவிடேல் – நீதயவு
  418. சூழ்ந்திடுக என்னையுநின் தொண்டருடன் சேர்த்தருள்க
    வாழ்ந்திடுக நின்தாள் மலர்.