Pattinathar Part 3

பட்டினத்தார்

முதல்வன் முறையீடு( கன்னி வனநாதா )
201:
மூலம் அறியேன்; முடியும் முடிவறியேன்
ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா!

202:
அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா!
பிரியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா!

203:
தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா!
மனுவாதி சத்தி வலையில் அகப்பட்டனடா!

204:
மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா!
தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா!
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா)

205:
மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா!
பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே.

206:
மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே;
திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே.

207:
வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே;
சித்துகற்கும் ஆசை சிதையேனே என்குதே.

208:
மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே;
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே.

209:
கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே;
செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே;

210:
மாற்றும் சலவை மறக்கேனே என்குதே;
சோற்றுக் குழியும் இன்னும் தூரேனே என்குதே.
(கன்னி வனநாதா! – கன்னி வனநாதா!)

211:
ஐந்து புலனும் அடங்கேனே என்குதே;
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே.

212:
காமக் குரோதம் கடக்கேனே என்குதே!
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே.

213:
அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே;
கைச்சும் இன்னுமானங் கழலேனே என்குதே;

214:
நீர்க்குமிழி ஆம்உடலை நித்தியமாய் எண்ணுதே!
ஆர்க்கும் உயராசை அழியேனே என்குதே.

215:
கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணும் திரமாய் இருப்போம் என்றெண்ணுதே.

216:
அநித்தியத்தை நித்தியம் என்றாதவராய் எண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே தனை மறக்கேன் என்குதே.

217:
நரகக் குழியும் இன்னும் நான் புசிப்பேன் என்குதே
உரகப் படத்தல்குல் உனைக் கெடுப்பேன் என்குதே.

218:
குரும்பை முலையும் குடிகெடுப்பேன் என்குதே;
அரும்பு விழியும் என்றன் ஆவி உண்பேன் என்குதே.

219:
மாதர் உருக் கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே.
ஆதரவும் அற்று இங்கு அரக்காய் உருகிறண்டா!

220:
கந்தனை ஈன்றருளுங் கன்னி வனநாதா!
எந்த விதத்தில் நான் ஏறிப் படருவண்டா!
(கன்னி வனநாதா! – கன்னி வனநாதா!)

221:
புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?

222:
கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ?

223:
பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
வேதனை செய் தானவராய் வீந்தநாள் போதாதோ?

224:
அன்னை வயிற்றில் அழிந்தநாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ?

225:
தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ?
சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ?

226:
நோய்உண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ?
பேய்உண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ?

227:
ஊனவுடல் கூன்குருடாய் உற்றநாள் போதாதோ?
ஈனப் புசிப்பில் இளைத்தநாள் போதாதோ?

228:
பட்டகளையும் பரதவிப்பும் போதாதோ?
கெட்டநாள் கெட்டேன் என்று கேளாதும் போதாதோ?

229:
நில்லாமைக்கே அழுது நின்றநாள் போதாதோ?
எல்லாரும் என்பாரம் எடுத்தநாள் போதாதோ?

230:
காமன் கணையால் கடைபட்டல் போதாதோ?
ஏமன் கரத்தால் இடியுண்டல் போதாதோ?

231:
நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ?
தேன் துளபத்தான் நேமி தேக்குண்டல் போதாதோ?

232:
உருத்திரனார் சங்காரத்து உற்றநாள் போதாதோ?
வருத்தம் அறிந்தையிலை! வாவென்று அழைத்தையிலை!
(கன்னி வனநாதா! – கன்னி வனநாதா!)

233:
பிறப்பைத் தவிர்த்தையிலை; பின்னாகக் கொண்டையிலை;
இறப்பைத் தவிர்த்தையிலை; என்னென்று கேட்டையிலை

234:
பாசம் எரித்தையிலை; பரதவிப்பைத் தீர்த்தையிலை;
பூசிய நீற்றைப் புனைஎன்று அளித்தையிலை;

235:
அடிமை என்று சொன்னையிலை; அக்கமணி சந்தையிலை;
விடும் உலகம் நோக்கி உன்றன் வேடம் அளித்தையிலை;

236:
உன்னில் அழைத்தயிலை; ஒன்றாகிக் கொண்டையிலை;
நின் அடியார் கூட்டத்தில் நீ அழைத்து வைத்தையிலை;

237:
ஓங்கும் பரத்துள் ஒளித்த அடியார்க்கு அடியான்
ஈங்கோர் அடியான் எமக்கென்று உரைத்தையிலை

238:
நாமம் தரித்தையிலை; நான் ஒழிய நின்றையிலை;
சேம அருளில் எனைச் சந்தித்து அழைத்தையிலை;

239:
முத்தி அளித்தையிலை; மோனம் கொடுத்தையிலை;
சித்தி அளித்தையிலை; சீராட்டிக் கொண்டையிலை.

240:
தவிப்பைத் தவிர்த்தையிலை; தானாக்கிக் கொண்டையிலை;
அவிப்பரிய தீயாம்என ஆசை தவிர்த்தையிலை;

241:
நின்ற நிலையில் நிறுத்தி எனை வைத்தையிலை;
துன்றுங் கரண மொடு தொக்கழியப் பார்த்தையிலை;

242:
கட்ட உல கக்காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை;
நிட்டையிலே நில்என்று நீ நிறுத்திக் கொண்டையிலை.
(கன்னி வனநாதா! – கன்னி வனநாதா!)

243:
கடைக்கண் அருள் தாடா! கன்னி வனநாதா!
கெடுக்கும் மலம் ஒறுக்கிக் கிட்டிவரப் பாரேடா!

244:
காதல் தணியேனோ! கண்டு மகிழேனோ!
சாதல் தவிரேனோ! சங்கடம் தான் தீரேனோ!

245:
உன்னைத் துதியேனோ! ஊர்நாடி வாரேனோ!
பொன் அடியைப் பாரேனோ! பூரித்து நில்லேனோ!

246:
ஓங்காரப் பொன் சிலம்பின் உல்லாசம் பாரேனோ!
பாங்கான தண்டை பலமணியும் பாரேனோ!

247:
வீரகண்டா மணியின் வெற்றிதனைப் பாரேனோ!
சூரர் கண்டு போற்றும் அந்த சுந்தரத்தைப் பாரேனோ!

248:
இடையில் புலித்தோல் இருந்தநலம் பாரேனோ!
விடையில் எழுந்தருளும் வெற்றியினைப் பாரேனோ!

249:
ஆனை உரிபோர்த்த அழகுதனைப் பாரேனோ!
மானைப் பிடித்து ஏந்தும் மலர்க்கரத்தைப் பாரேனோ!

250:
மாண்டார் தலைபூண்ட மார்பழகைப் பாரேனோ!
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ!

முதல்வன் முறையீடு( கன்னி வனநாதா )
251:
கண்டம் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ!
தொண்டர் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ!

252:
அருள் பழுத்த மாமதியாம் மான் அனத்தைப் பாரேனோ!
திருநயனச் சடை ஒளிரும் செழுங்கொழுமை பாரேனோ!

253:
செங்குமிழின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ!
அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ!

254:
முல்லை நிலவெறிக்கும் மூரல்ஒளி பாரேனோ!
அல்லார் புருவத்து அழகுதனைப் பாரேனோ!

255:
மகரம் கிடந்தொளிரும் வண்மைதனைப் பாரேனோ!
சிகர முடி அழகும் செஞ்சடையும் பாரேனோ!

256:
கங்கையொடு திங்கள் நின்ற காட்சிதனைப் பாரேனோ!
பொங்கு அரவைத் தான்சடையில் பூண்டவிதம் பாரேனோ!

257:
சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ!
எருக்கறு கூமத்தை அணி ஏகாந்தம் பாரேனோ!

258:
கொக்கிறகு சூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ!
அக்கினியை ஏந்திநின்ற ஆனந்தம் பாரேனோ!

259:
தூக்கிய காலும் துடி இடையும் பாரேனோ!
தாக்கும் முயலகன் மேல் தாண்டவத்தைப் பாரேனோ!

260:
வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ!
ஆசை அளிக்கும் அபயகரம் பாரேனோ

261:
அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப்
பெரியம்மை பாகம் வளர் பேரழகைப் பாரேனோ!

262:
சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ!
சந்திர சேகரனாய்த் தயவு செய்தல் பாரேனோ!
(கன்னி வனநாதா! – கன்னி வனநாதா!)

263:
கெட்டநாள் கெட்டாலும் கிருபை இனிப் பாரேடா!
பட்டநாள் பட்டாலும் பதம் எனக்குக் கிட்டாதோ!

264:
நற்பருவம் ஆக்கும் அந்த நாள் எனக்குக் கிட்டாதோ?
எப்பருவமும் சுழன்ற ஏகாந்தம் கிட்டாதோ?

265:
வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ?
தாக்கிறந்து நிற்கும் அந்தத் தற்சுத்தி கிட்டாதோ?

266:
வெந்துயரைத் தீர்க்கும் அந்த வெட்ட வெளி கிட்டாதோ?
சிந்தையையும் தீர்க்கும் அந்தத் தேறலது கிட்டாதோ?

267:
ஆன அடியார்க்கு அடிமை கொளக் கிட்டாதோ?
ஊனம்அற என்னை உணர்த்து வித்தல் கிட்டாதோ?

268:
என்னென்று சொல்லுவண்டா? என்குருவே! கேளேடா!
பின்னை எனக்குநீ யல்லாமல் பிறிதிலையே.
(கலை வனநாதா! – கன்னி வனநாதா)

269:
அன்ன விசாரமது அற்ற இடம் கிட்டாதோ?
சொர்ண விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ?

270:
உலக விசாரம் ஒழிந்த இடம் கிட்டாதோ?
மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ?

271:
ஒப்புவமை பற்றோடு ஒழிந்த இடம் கிட்டாதோ?
செப்புதற்கும் எட்டா தெளிந்த இடம் கிட்டாதோ

272:
வாக்கு மனாதீத அகோசரத்தில் செல்ல எனைத்
தாக்கும் அருள்குருவே! நின் தாள் இணைக்கே யான் போற்றி!

அருள் புலம்பல்
273:
ஐங்கரனைத் தெண்டனிட்டேன் அருளடைய வேண்டுமென்று
தங்காமல் வந்து ஒருவன் தன் சொரூபம் காட்டிஎனை

274:
கொள்ளைப் பிறப்பு அறுக்கக் கொண்டான் குருவடிவம்;
கள்ளப் புலன் அறுக்கக் காரணமாய் வந்தாண்டி!

275:
ஆதாரம் ஓராறும் ஐம்பத்தோர் அட்சரமும்
சூதான கோட்டை எல்லாம் சுட்டான் துரிசு அறவே!

276:
மெத்த விகாரம் விளைக்கும் பலபலவாம்
தத்துவங்கள் எல்லாம் தலைகெட்டு வெந்ததடி!

277:
என்னோடு உடன் பிறந்தார் எல்லாரும் பட்டார்கள்;
தன்னம் தனியே தனித்திருக்க மாட்டேண்டி!

278:
எல்லாரும் பட்டகளம் என்று தொலையுமடி
சொல்லி அழுதால் துயரம் எனக்கு ஆறுமடி!

279:
மண்முதலாம் ஐம்பூதம் மாண்டு விழக் கண்டேண்டி!
விண்முதலாம் ஐம்பொறிகள் வெந்துவிழக் கண்டேண்டி!

280:
நீங்காப் புலன்கள் ஐந்தும் நீறாக வெந்ததடி;
வாக்காதி ஐவரையும் மாண்டுவிழக் கண்டேண்டி!

281:
மனக்கரணம் அத்தனையும் வகைவகையே பட்டழிய
இனக்கரணத் தோடே எரிந்துவிழக் கண்டேண்டி!

282:
ஆத்தும தத்துவங்கள் அடுக்கு அழிய வெந்ததடி!
போற்றும் வகை எப்படியோ போதம் இழந்தானை?

283:
வித்தியா தத்துவங்கள் வெந்துவிழக் கண்டேண்டி
சுத்தவித்தை ஐந்தினையும் துரிசு அறவே.

284:
மூன்று வகைக் கிளையும் முப்பத்து அறுவரையும்
கான்றுவிழச் சுட்டுக் கருவேர் அறுத்தாண்டி!

285:
குருவாகி வந்தானோ? குலம் அறுக்க வந்தானோ?
உருவாகி வந்தானோ? உரு அழிக்க வந்தானோ

286:
கேடுவரும் என்றறியேன்; கெடுமதிகண் தோற்றாமல்
பாடுவரும் என்றறியேன்; பதியாண்டு இருந்தேண்டி;

287:
எல்லாரும் பட்டகளம் இன்ன இடம் என்றறியேன்;
பொல்லாங்கு, தீர்க்கும் பொறியிலியைக் கண்டேண்டி!

288:
உட்கோட்டைக் குள்ளிருந்தார் ஒக்க மடிந்தார்கள்;
அக்கோட்டைக் குள்ளிருந்தார் அறுபது பேர் பட்டார்கள்.

289:
ஒக்க மடிந்ததடி! ஊடுருவ வெந்ததடி!
கற்கோட்டை எல்லாம் கரிக்கோட்டை ஆச்சுதடி!

290:
தொண்ணூற்று அறுவரையும் சுட்டான் துரிசு அறவே;
கண்ணேறு பட்டதடி கருவேர் அறுத்தாண்டி!

291:
ஓங்காரம் கெட்டதடி! உள்ளதெல்லாம் போச்சுதடி!
ஆங்காரம் கெட்டதடி! அடியோடு அறுத்தாண்டி!

292:
தரையாம் குடிலை முதல் தட்டுருவ வெந்ததடி!
இரையும் மனத்து இடும்பை எல்லாம் அறுத்தாண்டி!

293:
முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி!
தன்னை அறியவே தான் ஒருத்தி யானேண்டி!

294:
என்னையே நான் அறிய இருவினையும் ஈடழித்துத்
தன்னை அறியத் தலம் எனக்குச் சொன்னாண்டி!

295:
தன்னை அறிந்தேண்டி! தனக்குமரி ஆனேண்டி!
தன்னம் தனியே தனி இருக்கும் பக்குவமோ?

296:
வீட்டில் ஒருவரில்லை வெட்ட வெளி ஆனேண்டி!
காட்டுக்கு எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்

297:
நகையாரோ கண்டவர்கள்? நாட்டுக்குப் பாட்டலவோ?
பகையாரோ கண்டவர்கள்? பார்த்தாருக்கு ஏச்சலவோ?

298:
இந்நிலைமை கண்டாண்டி! எங்கும் இருந்தாண்டி!
கன்னி அழித்தாண்டி! கற்பைக் குலைத்தாண்டி.

299:
கற்புக் குலைத்தமையும், கருவோ அறுத்தமையும்,
பொற்புக் குலைத்தமையும், போதம் இழந்தமையும்.

300:
என்ன வினைவருமோ! இன்னம் எனக்கு என்றறியேன்!
சொன்ன சொல் எல்லாம் பலித்ததடி! சோர்வறவே.

அருள் புலம்பல்

301:
கங்குல்பகல் அற்றிடத்தைக் காட்டிக் கொடுத்தாண்டி!
பங்கம் அழித்தாண்டி! பார்த்தானைப் பார்த்திருந்தேன்.

302:
சாதியில் கூட்டுவரோ? சாத்திரத்துக்கு உள்ளாமோ?
ஓதிஉணர்ந்ததெல்லாம் உள்ளபடி ஆச்சுதடி!

303:
என்ன குற்றம் செய்தேனோ எல்லாரும் காணாமல்,
அன்னை சுற்றம் எல்லாம் அறியாரோ அம்புவியில்?

304:
கொன்றாரைத் தின்றேனோ? தின்றாரைக் கொன்றேனோ?
எண்ணாத எல்லாம் எண்ணும் இச்சை மறந்தேனோ?

305:
சாதியில் கூட்டுவரோ? சமயத்தோர் எண்ணுவரோ?
பேதித்து வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி?

306:
கண்டார்க்குப் பெண்ணலவோ? காணார்க்கும் காமமடி!
உண்டார்கள் உண்டதெலாம் ஊணல்ல துண்டர்களோ?

307:
கொண்டவர்கள் கொண்டதெல்லாம் கொள்ளாதார் கொள்ளுவரோ?
விண்டவர்கள் கண்டவரோ? கண்டவர்கள் விண்டவரோ?

308:
பண்டாய நான்மறைகள் பாடும் பரிசலவோ?
தொண்டாய தொண்டர்உளம் தோற்றி ஒடுங்குமதோ.

309:
ஓத எளிதோ? ஒருவர் உணர்வரிதோ?
பேதம்அற எங்கும் விளங்கும் பெருமையன்காண்.

310:
வாக்கும் மனமும் கடந்த மனோலயன் காண்!
நோக்க அரியவன் காண்; நுண்ணியரில் நுண்ணியன் காண்!

311:
சொல்லுக்கு அடங்கான் காண்! சொல்லிறந்து நின்றவன் காண்!
கல்லுள் இருந்த கனல்ஒளிபோல் நின்றவன் காண்!

312:
சுட்டிறந்த பாழ் அதனில் சுகித்திருக்கச் சொன்னவன் காண்!
ஏட்டில் எழுத்தோ? எழுதினவன் கைப்பிழையோ?

313:
சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்;
அம்மா! பொருள் இதுஎன அடைய விழுங்கினண்டி!

314:
பார்த்த இடம் எல்லாம் பரமாகக் கண்டேண்டி!
கோத்த நிலைகுலைத்த கொள்கை அறியேண்டி!

315:
மஞ்சனம் ஆட்டி மலர்பறித்துச் சாத்தாமல்
நெஞ்சு வெறும் பாழானேன் நின்றநிலை காணேண்டி!

316:
பாடிப் படித்திருந்தும் பன்மலர்கள் சாத்தாமல்;
ஓடித் திரியாமல் உருக்கெட்டு விட்டேண்டி!

317:
மாணிக்கத் துள்ஒளிபோல் மருவி இருந்தாண்டி!
பேணித் தொழும் அடியார் பேசாப் பெருமையன் காண்!

318:
அன்றுமுதல் இன்றளவும் அறியாப் பருவமதில்
என்றும் பொதுவாய் இருந்த நிராமயன் காண்!

319:
சித்த விகாரத்தால் சின்மயனைக் காணாமல்
புத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே.

320:
பத்தி அறியாமல் பாழில் கவிழ்ந்தேண்டி!
ஒத்தஇடம் நித்திரை என்று ஒத்தும் இருந்தேண்டி!

321:
செத்தாரை ஒத்தேண்டி! சிந்தை தெளிந்தேண்டி!
மற்றாரும் இல்லையடி! மறுமாற்றம் காணேண்டி!

322:
கல்வியல்ல; கேள்வியல்ல; கைநாட்டும் காரணம்காண்
எல்லையள வற்றதடி! எங்கும் நிறைந்ததடி!

323:
வாசா மகோசரத்தை மருவிஇடம் கொண்டாண்டி;
ஆசூசம் இல்லாண்டி! அறிவுக்கு அறிவாண்டி!

324:
பத்துத் திசைக்கும் அடங்காப் பருவமடி!
எத்திசைக்கும் எங்கும் இடைவிடாத ஏகமடி!

325:
தித்திக்க ஊறுமடி! சித்தம் உடையார்க்குப்
பத்திக் கடலுள் பதித்தபரஞ் சோதியடி!

326:
உள்ளுணர்வாய் நின்றவர்தம் உணர்வுக்கு உணர்வாண்டி!
எள்ளளவும் உள்ளத்தில் ஏறிக் குறையாண்டி!

327:
தூரும் தலையும் இலான்; தோற்றம் ஒடுக்கம் இலான்
ஆரும் அறியாமல் அகண்டமாய் நின்றாண்டி!

328:
எத்தனையோ அண்டத்து இருந்தவர்கள் எத்தனை பேர்
அத்தனைபேர் உண்டாலும் அணுவும் குறையாண்டி!

329:
வாக்கும் மனமும் வடிவும் இலா வான் பொருள் காண்!
போக்கும் வரவும் இலான்; பொருவரிய பூரணன் காண்!

330:
காட்சிக்கு எளியான் காண்! கண்டாலும் காணான்காண்!
மாட்சி மனம் வைத்தார்க்கு மாணிக்கத் துள்ஒளிகாண்!

331:
வாழ்த்தி அவனை வழிபட்டால் மன்னுயிர்கள்
தோற்றம் அறியான் காண்! சொல் இறந்த சோதியன் காண்!

332:
ஐயம் அறுத்தவனை ஆராய்வார் உண்டானால்
வையகத்தே வந்து மலர்ப்பாதம் வைத்திடுவான்.

333:
அணுவுக்கும் மேருவுக்கும் அகம்புறமாய் நின்றான் காண்!
கணுமுற்றும் ஞானக் கரும்பின் தெளிவான் காண்!

334:
எந்நாளும் இந்நாளும் இப்படியாய் அப்படியாய்ச்
சொன்னாலும் கேளான் காண்! தோத்திரத்தில் கொள்ளான் காண்!

335:
ஆத்தாளுக்கு ஆத்தாளாம்; அப்பனுக்கும் அப்பனுமாம்;
கோத்தார்க்குக் கோத்தநிலை கொண்ட குணக்கடல்காண்;

336:
இப்போ புதிதோடி! எத்தனை நாள் உள்ளதடி!
அப்போதைக்கு அப்போது அருளறிவும் தந்தாண்டி!

337:
பற்றற்றார் பற்றாகப் பற்றி இருந்தாண்டி!
குற்றம் அறுத்தாண்டி! கூடி இருந்தாண்டி!

338:
வெட்ட வெளியில் எனைமேவி இருந்தாண்டி!
பட்டப் பகலிலடி பார்த்திருந்தார் எல்லோரும்.

339:
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததடி வாழாமல்
தாழாமல் தாழ்ந்தேண்டி! சற்றும் குறையாமல்.

340:
பொய்யான வாழ்வு எனக்குப் போதுமெனக் காணேண்டி!
மெய்யான வாழ்வு எனக்கு வெறும் பாழாய் விட்டதடி!

341:
கன்னி அழித்தவனைக் கண்ணாரக் கண்டேண்டி!
என்இயல்பு நான் அறியேன்; ஈதென்ன மாயமடி!

342:
சொல்லாலே சொல்லுதற்குச் சொல்லவாய் இல்லையடி!
எல்லாரும் கண்டிருந்தும் இப்போது அறியார்கள்!

343:
கண்மாயம் இட்டாண்டி! கருத்தும் இழந்தேண்டி!
உள்மாயம் இட்டவனை உரு அழியக் கண்டேண்டி!

344:
என்ன சொல்லப் போறேன் நான் இந்த அதிசயத்தைக்
கன்னி இளங்கமுகு காய்த்ததடி கண்ணார.

345:
ஆர்ந்த இடம் அத்தனையும் அருளாய் இருக்குமடி!
சார்ந்த இடம் எல்லாம் சவ்வாது மணக்குதடி!

346:
இந்தமணம் எங்கும் இயற்கை மணம் என்றறிந்து
அந்தசுகா தீதத்து அரும்கடலில் மூழ்கினண்டி!

347:
இரும்பின் உறை நீர்போல் எனைவி ழுங்கிக் கொண்டாண்டி!
அரும்பில்உறை வாசனை போல் அன்றே இருந்தாண்டி!

348:
அக்கினிகற் பூரத்தை அற விழுங்கிக் கொண்டாற்போல்
மக்கினம் பட்டுள்ளே மருவி இருந்தாண்டி!

349:
கடல்நீரும் ஆறும்போல் கலந்துகரை காணேண்டி!
உடலும் உயிரும் போல் உள்கலந்து நின்றாண்டி!

350:
பொன்னும் உரை மாற்றும்போல் பொருவு அரிய பூரணன்காண்
மன்னுமனு பூதியடி மாணிக்கத் துள்ஒளிபோல்.

அருள் புலம்பல்
351:
கங்குகரை இல்லாண்டி! கரைகாணாக் கப்பலடி!
எங்கும் அளவில்லாண்டி! ஏகமாய் நின்றாண்டி.

352:
தீவகம்போல் என்னைச் சேர்ந்தபர சின்மயன் காண்;
பாவகம் ஒன்று இல்லாண்டி! பார்த்தஇடம் எல்லாம் பரன்காண்!

353:
உள்ளார்க்கும் உள்ளாண்டி! ஊருமில்லான்! பேருமில்லான்!
கள்ளப்புலன் அறுக்கக் காரணமாய் வந்தாண்டி!

354:
அப்பிறப்புக்கு எல்லாம் அருளாய் அமர்ந்தாண்டி!
இப்பிறப்பில் வந்தான் இவனாகும் மெய்ப்பொருள்காண்!

355:
நீர் ஒளிபோல் எங்கும் நிறைந்த நிராமயன்காண்!
பார் ஒளிபோல் எங்கும் பரந்த பராபரன் காண்!

356:
நூலால் உணர்வரிய நுண்மையினும் நுண்மையன்காண்!
பாலூறு சர்க்கரைபோல் பரந்தபரி பூரணன் காண்!

357:
உளக்கண்ணுக்கு அல்லால் ஊன்கண்ணால் ஓருமதோ?
விளக்குச் சுடர் ஒளிபோல் மேவிஇருந்தாண்டி!

358:
கல்லுள் இருந்த கனல் ஒளிபோல் காரணமாய்ப்
புல்லி இருந்தும் பொருவு அரிய பூரணன்காண்!

359:
பொற்பூவும் வாசனைபோல் போதம் பிறந்தவர்க்குக்
கற்பூவும் வாசனை போல் காணாக் கயவருக்கு

360:
மைக்குழம்பும் முத்தும்போல் மருவி, மறவாதவர்க்குக்
கைக்குள் கனியாகும் கரு அறுத்த காரணர்க்கு.

361:
பளிங்கில் பவளமடி! பற்று அற்ற பாவலர்க்குக்
கிளிஞ்சிலை வெள்ளி என்பார் கிட்டாதார் கிட்டுவரோ?

362:
ஏட்டுக்கு அடங்காண்டி! எழுத்தில் பிறவாண்டி!
நாட்டில் நரிகளெல்லாம் நல்புரவி செய்தாண்டி!

363:
பஞ்சப் பிரளயத்து மிஞ்சி இருப்பாண்டி!
நஞ்சு பொதிமிட ற்றான் நயனத்து அழல்விழியான்.

364:
அகம்காக்கும்; புறம்காக்கும்! அளவிலா அண்டமுதல்
செகம்காக்கும்; காணாத் திசைபத்தும் காக்குமடி!

365:
பேசாப் பிரமமடி! பேச்சிறந்த பேரொளிகாண்!
ஆசா பாசங்கள் அணுகாத வேரொளிகாண்!

366:
தேசம் இறந்தவன் காண்! திசை இறந்த தென் கடல்காண்!
ஊசி முனை இன்றி இல்லா உருபொருள்காண்!

367:
சிப்பியில் முத்தொளிகாண்! சின்மய நோக்கு இல்லார்க்கு
அப்பில் ஒளிபோல் அமர்ந்த அரும்பொருள்காண்!

368:
ஆல விருட்சமடி! அளவிலாச் சாகையடி!
மேலாம் பதங்கள் விசும்புஊடுருவும் மெய்ப்பொருள்காண்!

369:
வங்கிஷம் எல்லாம் கடந்து மருவா மலர்ப்பதம்காண்!
அங்கிஷமாய் எங்கும் ஆழ்ந்த அரும்பொருள்காண்!

370:
நாமநட்டம் ஆனதடி! நவில இடம் இல்லையடி!
காமனைக் கண்ணால் எரிக்கக் கனல் விழித்த காரணன் காண்!

371:
கொட்டாத சொம்பொனடி! குளியாத் தரளமடி!
எட்டாத கொம்பிலடி ஈப்புகாத் தேனமுதம்.

372:
காணிப்பொன் னாணியுடன் கல்லுரைமாற்று இன்னதென்றே
ஆணியுடன் கூட்டி அடங்கலிட்டுக் கொண்டாண்டி!

373:
அளவிறந்த அண்டத்தார் அத்தனைபேர் உண்டாலும்
பிளவளவும் தான்சற்றும் பேசாப் பிரமமடி!

374:
கல்நெஞ்சின் உள்ளே கழுநீலம் பூத்தாற்போல்
என்நெஞ்சின் உள்ளே இணை அடிகள் வைத்தாண்டி!

375:
வேதப் புரவியடி! விரைந்தோடியும் அறியார்;
காதற்ற ஞானமடி! காண்பார் கருத்துடையோன்.

376:
பாச வினையைப் படப்பார்த்த பார்வையுடன்
நேசத்தைக் காட்டி நில் என்று சொன்னாண்டி!

377:
ஓசை ஒடுங்கும் இடம் ஓங்காரத்து உள் ஒளிகாண்!
பேசாது இருக்கும் பிரமம் இது என்றாண்டி!

378:
சின்மய நல்நோக்கால் சிற்சொரூபம் காட்டிஎனைத்
தன் மயமாய் ஆக்கியே தான் அவனாய் நின்றாண்டி!

379:
தான் என்னைப் பார்த்தாண்டி! தன்னைத்தான் அல்லாமல்
நான் என்ன சொல்லுவண்டி! நவில இடம் இல்லையடி!

380:
இன்றிருந்து நாளைக்கு இறக்கிறபேர் எல்லாரும்
என்றும் பரிபூரணத்தில் இனிது இருக்கச் சொன்னாண்டி!

381:
பார்க்கில் எளிது அலவோ? பற்றற்ற பற்று அலவோ?
ஆர்க்கும் இடம் காட்ட அவனிதனில் வந்தாண்டி!

382:
இத்தனை காலமடி இறந்து பிறந்த தெல்லாம்
இத்தனையும் இல்லையடி இரும்பில்உறை நீரானேன்.

383:
எக்காலம் பட்டதடி! இறந்து பிறந்ததெல்லாம்
அக்காலம் எல்லாம் அழுந்தினேன் நான் நரகில்.

384:
காலம் கழிந்ததடி! கர்மம் எல்லாம் போச்சுதடி!
நாலு வகைக்கருவும் நாமநட்டம் ஆச்சுதடி!

385:
முப்பாழுக்கு அப்பால் முதற்பாழ் முழு முதலாய்
இப்போது வந்தான் காண்! எனை விழுங்கிக் கொண்டான்காண்.

386:
பாலின்கண் நெய் இருந்தாற் போலப் பரஞ்சோதி
ஆலிங்கனம் செய்து அறவிழுங்கிக் கொண்டாண்டி!

387:
செத்தபடம் ஆனேண்டி! தீ இரும்பில் நீரானேன்;
ஒத்தவிடம் நித்திரை என்று ஓதும் உணர்வறிந்தேன்.

388:
ஒப்பும் உவமையும் அற்ற ஓத அரிதாய பொருள்
இப்புவி யில்குருவே என்னவந்தோன் தாள் வாழி.

389:
ஒப்பாரி சொல்லிடினும் உவமை பிழைத்திடினும்
முப்பாழும் கற்றுணர்ந்தோர் முன்னோர் பொறுத்தருள்வார்.

இறந்த காலத்து இரங்கல்
390:
வார்த்தைத் திறமில்லா மனிதருக்குப் புன் சொல்லாம்
சாத்திரங்கள் சொல்லிச் சதுர் இழந்து கெட்டேனே.

391:
மெத்த மெத்தச் செல்வாக்கில் வேறு மருள் எடுத்துத்
தத்தித் தலை கீழாய்த் தான் நடந்து கெட்டேனே;

392:
வழக்கத் தலங்களினும் மண் பெண் பொன் ஆசையினும்
பழக்கம் தவிராமல் பதி இழந்து கெட்டேனே.

393:
ஆணி பொருந்தும் அரும்பூமி அத்தனையும்
காணில் நமது என்று கனம் பேசிக் கெட்டேனே.

394:
ஆசாரம் இல்லாத அசடருடன் கூடிப்
பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே.

395:
குருமார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக்
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே.

396:
ஆலம் அருந்தும் அரன்பெருமை எண்ணாமல்
பாலர் பெண்டிர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே.

397:
பிணவாசம் உற்ற பெரும்காயம் மெய்யென்று
பண ஆசையாலே பதி இழந்து கெட்டேனே.

398:
கண்ட புலவர் கனக்கவே தான் புகழ
உண்ட உடம்பெல்லாம் உப்பரித்துக் கெட்டேனே.

399:
எண்ணிறந்த சென்மம் எடுத்துச் சிவபூசை
பண்ணிப் பிழையாமல் பதி இழந்து கெட்டேனே.

400:
சிற்றெறும்பு சற்றும் தீண்டப் பொறாஉடம்பை
உற்றுருக்கவும் சுடவும் ஒப்பித்து மாண்டேனே.