திருஞானசம்பந்தர்- ‘தோடுடைய செவியன்’
திருப்பிரமபுரம்(சீர்காழி)
இது சோழநாட்டுத் திருத்தலம்
முதற்றிருமுறை
பண்: நட்டபாடை
சாமி பெயர்: பிரமபுரீசர்
தேவியார்: திருநிலைநாயகியம்மை
திருத்தோணியில் வீற்றிருப்பவர்- தோணியப்பர்
(திருஞானசம்பந்தப்பிள்ளையார் பாடிய முதல் திருப்பதிகம்)
திருப் பிரம்மபுரம்
பாடல்: 01(தோடுடைய)
தோடு டையசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்
காடு டையசுட லைப்பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன்
ஏடு டையமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள் செய்த
பீடு டைய பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே
பதம் பிரித்து
தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடி
காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
பாடல்: 02 (முற்றலாமையிள)
முற்ற லாமையிள நாகமோ டேன முளைக் கொம் பவைபூண்டு
வற்ற லோடுகல னாப்பலி தேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
கற்றல் கேட்டலுடை யார்பெரி யார்கழல் கையாற் றொழுதேத்தப்
பெற்ற மூர்ந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
பதம் பிரித்து
முற்றல் ஆமை இள நாகமோடே என முளைக் கொம்பு அவை பூண்டு
வற்றல் ஓடு கலனாப்பலி தேர்ந்து எனது உள்ளங் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்தப்
பெற்ற மூர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
பாடல்: 03 (நீர்பரந்த)
நீர்ப ரந்தநிமிர் புன்சடை மேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்ப ரந்தவின வெள்வளை சோரவென் னுள்ளங் கவர்கள்வன்
ஊர்ப ரந்தவுல கின்முத லாகிய வோரூ ரிதுவென்னப்
பேர்ப ரந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
பதம் பிரித்து
நீர் பரந்த நிமிர் புன்சடை மேல் ஓர் நிலா வெண்மதி சூடி
ஏர் பரந்த இன வெள்வளை சோர என் உள்ளங் கவர் கள்வன்
ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓரூர் இது என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
பாடல்: 04 (விண்மகிழ்ந்த)
விண்ம கிழ்ந்தமதி லெய்தது மன்றிவி ளங்கு தலையோட்டில்
உண்ம கிழ்ந்துபலி தேரிய வந்தென துள்ளங் கவர்கள்வன்
மண்ம கிழ்ந்தவர வம்மலர்க் கொன்றை மலிந்த வரைமார்பில்
பெண்ம கிழ்ந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
பதம் பிரித்து
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில்
உண் மகிழ்ந்து பலிதேரிய வந்து எனது உள்ளங் கவர் கள்வன்
மண் மகிழ்ந்து அரவம் மலர்க் கொன்றை மலிந்தவரை மார்பில்
பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
பாடல்: 05 (ஒருமை பெண்மை)
ஒருமை பெண்மையுடை யன்சடை யன்விடை யூரும் மிவனென்ன
அருமை யாகவுரை செய்ய வமர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
கருமை பெற்றகடல் கொள்ளமி தந்ததோர் காலம் மிதுவென்னப்
பெருமை பெற்றபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
பதம் பிரித்து
ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்ன
அருமையாக் உரை செய்ய அமர்ந்து என் உள்ளங் கவர் கள்வன்
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஓர் காலம் இது என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
பாடல்: 06 (மறைகலந்த)
மறைக லந்தவொலி பாடலோ டாடல ராகி மழுவேந்தி
இறைக லந்தவின வெள்வளை சோரவென் னுள்ளங் கவர்கள்வன்
கறைக லந்தகடி யார்பொழி னீடுயர் சோலைக் கதிர்சிந்தப்
பிறைக லந்த பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே
பதம் பிரித்து
மறை கலந்த ஒலி பாடலோடு ஆடலராகி மழு ஏந்தி
இறை கலந்த வின வெள்வளை சோர என் உள்ளங் கவர் கள்வன்
கறை கலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக் கதிர் சிந்தப்
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
பாடல்: 07 (சடைமுயங்கு)
சடைமு யங்குபுன லன்னன லன்னெரி வீசிச் சதிர்வெய்த
உடைமு யங்குமர வோடுழி தந்தென துள்ளங் கவர்கள்வன்
கடன்மு யங்குகழி சூழ்குளிர் கானலம் பொன்னஞ் சிறகன்னம்
பெடைமு யங்குபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
பதம் பிரித்து
சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசிச் சதிர் எய்த
உடை முயங்கு மர ஓடுழி தந்து எனது உள்ளங் கவர் கள்வன்
கடன் முயங்கு கழி சூழ் குளிர் கானலம் பொன்னஞ் சிறகன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
பாடல்: 08 (வியரிலங்கு)
வியரி லங்குவரை யுந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயரி லங்கையரை யன்வலி செற்றென துள்ளங் கவர்கள்வன்
துயரி லங்குமுல கிற்பல வூழிக டோன்றும் பொழுதெல்லாம்
பெயரி லங்குபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
பதம் பிரித்து
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளங் கவர் கள்வன்
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
பாடல்: 09 (தாணுதல்)
தாணு தல்செய்திறை காணிய மாலொடு தண்டா மரையானும்
நீணு தல்செய்தொழி யந்நிமிர்ந் தானென துள்ளங் கவர்கள்வன்
வாணு தல்செய்மக ளீர்முத லாகிய வையத் தவரேத்தப்
பேணு தல்செய்பிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
பதம் பிரித்து
தாணுதல் செய்து இறை காணிய மாலொடு தண்டாமரை யானும்
நீணுதல் செய்து ஒழியந்தி நிமிர்ந்தான் என உள்ளங் கவர் கள்வன்
வாணுதல் செய் மகளீர் முதலாகிய வையத்து அவரேத்தப்
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
பாடல்: 10 (புத்தரோடு)
புத்த ரோடுபொறி யில்சமணும்புறங் கூற நெறிநில்லா
ஒத்த சொல்லவுல கம்பலி தேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
மத்த யானைமறு கவ்வுரி போர்த்ததோர் மாயம் மிதுவென்னப்
பித்தர் போலும்பிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
பதம் பிரித்து
புத்தரோடு பொறியில் சமணும் புறம் கூற நெறி நில்லா
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து என உள்ளங் கவர் கள்வன்
மத்த யானை மறுகு அவ்வுரி போர்த்தது ஓர் மாயம் இது என்னப்
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
பாடல்: 11 (அருநெறிய)
அருநெ றியமறை வல்ல முனியகன் பொய்கை யலர்மேய
பெருநெ றியபிர மாபுர மேவிய பெம்மா னிவன்றன்னை
ஒருநெ றியமனம் வைத்துணர் ஞானசம் பந்தன் னுரை செய்த
திருநெ றியதமிழ் வல்லவர் தொல்வினை தீர்த லெளிதாமே
பதம் பிரித்து
அரு நெறிய மறை வல்ல முனி அகன்ற பொய்கை அலர் மேய
பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல் வினை தீர்தல் எளிதாமே!!
திருச்சிற்றம்பலம்