Thiruvarangam

எத்தனை மகிமை திருஅரங்கநாதனுக்கு!

ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல்.அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இறுதி கொண்டு அனுபவிப்போம்.

“வைகுந்தம் அடைவது மன்னவர் விதி’

என்று ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடையவேண்டும்.

வைகுந்தம் கிடைக்குமோ கிடைக்காதோ (ஏன் என்று நமக்கே தெரியும்),

ஸ்ரீரங்கம் பூலோக வைகுந்தம். வைகுந்த அனுபவம் இங்கேயே கிடைக்கிறது என்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது?

ஆதிசங்கரர் தன்னுடைய ரெங்கநாத அஷ்டகத்தில்

“”இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம் புனர் ந சாங்கம் யதி சாங்கமேதி! பாணெள ரதாங்கம் சரணேsம்பு காங்கம் யானே விஹங்கம் ஸயநே புஜங்கம்!!”

என்று ஸ்ரீரங்கத்தில் வாழ ஆசைபடுகிறார் என்றால் பாருங்கள்.

ஆசைப்பட்டது எல்லாத்தையும் கொடுக்கும் இடம் ஸ்ரீரங்கம்.இங்கு உடலை நீத்தவன் பிறப்பதில்லை என்கிறார் ஆதிசங்கரர்..

பதின்மர் பாடிய பெருமாள் அரங்கன். ஆராதஅருளமுதம் பொதிந்த கோயில் அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்தகோயில் தோலாத தனிவீரன் தொழுத கோயில் துணையான வீடணற்குத் துணையாங்கோயில் சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில் செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில் தீராத வினையனைத்தும் திர்க்கும்கோயில் திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே!

என்று தன்னுடைய அதிகார ஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி ஸ்வாமி தேசிகன் குறிப்பிடுகிறார்.

ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம் மொத்தம் எட்டு. அதாவது தானாகவே உண்டான ஷேத்ரங்கள் இவை. தெற்கே வானமாமலை, தொண்டை நாட்டிலே ஸ்ரீமுஷ்ணம், தமிழ் நாட்டின் எல்லையில் திருவேங்கடம்,

ஸ்ரீரங்கம், வடநாட்டில் பதரிகாசரமம், சாலக்ராமம், ராஜஸ்தானில் புஷ்கரம்,

நைமிசராண்யம், என்பவை தான் அவை.

வானமாமலையில் எண்ணெய் விசேஷம். அங்கு திருமடப்பள்ளியில் வரமிளகாய் பயன்படுத்து வதில்லையாம்.

பகவான் காடு ரூபமாக உள்ளார் நைமிசாரண்யத்தில். தண்ணிர் ரூபத்தில் உள்ளார் புஷ்கரத்தில்.

ஸ்ரீமுஷ்ணத்தில் மூலஸ்தானத்தில் வராஹமுர்த்தி தனியே கோயில் கொண்டுள்ளார்.

இந்த ஸ்வயம்வ்யக்த ஷேத்ரங்களில், ஸ்ரீரங்கம் ஒன்றில் தான் பெருமாள் சயனக் கோலத்தில் உள்ளார்.

மற்ற இடங்களில் நின்று கொண்டோ அல்லது அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். ஆக ஸ்ரீரங்கத்திற்கு விசேஷம் சயனக் கோலம்,

பொய்கை ஆழ்வார் காஞ்சியிலும், பேயாழவார் மயிலாபூரிலும், பூதத்தாழவார் திருக்கடல்மல்லை என்று ஆழ்வார்கள் எல்லோரும் வெவ்வேறு இடத்தில் பிறந்து இருந்தாலும் சேர்ந்த இடம் ஸ்ரீரங்கம்.

ஆழ்வார்கள் வெவ்வேறு இடத்திலே பிறந்தாலும்

“அடியவர்கள் வாழ, அரங்கநகர் வாழ” என்று அரங்கனைத்தான் வாழ்த்தினார்கள்

.

“இவ்வளவு நேரம் ஆகிவிட்டது , சயனம் கொள்ளுகிற நேரத்திலே எங்க கிளம்பி விட்டீர்” என்று அடியவர் திருமாலிருஜ் சோலை பெருமாளைப் பார்த்துக் கேட்கிறார்.

“இரும் அடியவரே, நாளைக் காலை தரிசனம் கொடுப்போம், பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்கிறோம்” ,என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அழகார் மலை அழகன்.

அவர் மட்டுமா, திருவேங்கடத்தான்,

“எப்போது பொது சேவை முடியும்’ என்று அர்ச்சகரைப் பார்த்துக் கேட்கிறார்.

“ஏன் ஸ்வாமி” இது அர்ச்சகர்.

“பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும்” என்கிறார், பெருமாள்.

விக்கித்து நிக்கிறார் அர்ச்சகர்.

இப்படி எல்லா திவ்விய தேசத்து பெருமாளும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்களாம். நாச்சியார் தன் நாச்சியார் திருமொழியில்,

“தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார் வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார் பள்ளி கொள்ளுமிடத்தடி கொட்டிட கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே”

என்று எல்லா திவ்விய தேசத்து எம்பெருமான்களும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்கள் என்று பாசுரத்தில் கூறுகிறார்

எத்தனை மகிமை திருஅரங்கநாதனுக்கு!