Idaikattu Sithar Padalkal

  1. இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்

இடைக்காடு என்னும் ஊரினர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு – முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் – இடையர் – கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர்.

சங்கபுலவர்களிலே இடைக்காடனார் என்று ஒருவர் உண்டு. இவர் பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு முதலிய சங்க நூற்களில் உள்ளன. திருவள்ளுவ மாலையிலும் ஒரு பாடல் உள்ளது. திருவிளையாடல் புராணத்திலே இவரைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஊசிமுறி என்றொரு நூல் இவரால் பாடபட்டதாகப் பழைய உரைகளினால் அறியக் கிடக்கிறது. ஆனால் சங்ககால புலவரும் இடைக்காட்டுச் சித்தரும் வேறு வேறானவர்.

இவர் கொங்கணரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கி.பி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர்.
“தாந் திமிதிமி தந்தக் கோனாரே
தீந் திமிதிமி திந்தக் கோனாரே
ஆனந்தக் கோனாரே – அருள்
ஆனந்தக் கோனாரே”
எனப் பாடுவோரும் கேட்போரும் குதித்தாடும் இந்தப் பாடல்கள் ஆசை என்னும் பசுவையும் சினம் என்னும் விஷப்பாம்பையும் அடக்கி விட்டால் முத்தி வாய்த்ததென்று எண்ணடா தாண்டவக்கோனே என்று கூறும் சிறப்புடையன.

இவர் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரிடம் சித்தர் ஒருவர் வந்து பால் கேட்க, இவர் பால் கறந்து கொடுக்கப், பருகிய சித்தர் மனமகிழ்ந்து, இவர் அனைத்து சித்துக்களும் அடையும்படி செய்து சென்றதனால் இவர் சித்தர் ஆனார் என்பர்.

ஒருமுறை நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது இவர் உணவின்றித் தவித்த ஆடுமாடுகளைக் காப்பாற்றியதோடு, மழை பெய்வித்துப் பஞ்சத்ததைப் போக்கினார் என்றும் கதை வழங்குகிறது.

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்
காப்பு

கலிவிருத்தம்

ஆதி யந்தமில் லாதவ னாதியைத்
தீது றும்பவம் தீப்படு பஞ்சுபோல்
மோது றும்படி முப்பொறி யொத்துறக்
காதலாகக் கருத்திற் கருதுவோம்.

தாண்டவராயக் கோனார் கூற்று

கண்ணிகள்

எல்லா உலகமும் எல்லா உயிர்களும்
எல்லா பொருள்களும் எண்ணரிய
வல்லாளன் ஆதிபரம சிவனது
சொல்லால் ஆகுமே கோனாரே.
1
வானியல் போல் வயங்கும் பிரமமே
சூனியம் என்றறிந்து ஏத்தாக்கால்
ஊனியல் ஆவிக்கு ஒருகதி இல்லையென்று
ஓர்ந்து கொள்ளுவீர் நீர் கோனாரே.
2
முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது
முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால்
சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும்
சேரா வாகுமே கோனாரே.
3
தொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே
சோம்பலற்றுத் தவஞ் செய்யாக்கால்
எல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு
இல்லையென்று எண்ணுவீர் கோனாரே.
4
ஆரண மூலத்தை அன்புட னேபர
மானந்தக் கோலத்தைப் பண்புடனே
பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப்
போதத்தைச் சார்ந்திரும் கோனாரே.
5
காலா காலங் கடந்திடும் சோதியைக்
கற்பனை கடந்த அற்புதத்தை
நூலார் பெரியவர் சொன்னநுண் பொருளை
நோக்கத்திற் காண்பது கோனாரே.
6
சொல்லருஞ் சகள நிட்களம் ஆனதைச்
சொல்லினாற் சொல்லாமல் கோனாரே
அல்லும் பகலும் அகத்தில் இருந்திடில்
அந்தகன் கிட்டுமோ கோனாரே.
7
சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடும்
தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
நாறி இடப்பாகன்தாள் நெஞ்சிற் போற்றியே
நற்பதி சேர்ந்திடும் கோனாரே.
8
மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத
முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை யமயத்தும்
சிந்தையில் வைப்பீரே கோனாரே.
9
பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
பற்றற்று நின்றதைப் பற்றி அன்பாய்
நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே
நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே.
10

நாராயணக் கோனார் கூற்று

(தரவு கொச்சகம்)

சீரார் சிவகொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
பாராதி வான்பொருளைப்பஞ்ச உரு ஆனஒன்றைப்
பேரான விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை
நேராக எந்நாளும் நெஞ்சுஇருத்தி வாழ்வேனே.
11
கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்
பெண்ணுருவப் பாதியினைப் பேசரிய முப்பொருளை
விண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத்
தண்ணளியை உள்ளில் வைத்துசாரூபஞ் சாருவனே.
12
கண்ணிகள்

மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே – முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே
13
சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே – யாவும்
சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே
14
ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே – இந்த
அண்டமெல்லாம் கண்டறிவாய் தாண்டவக்கோனே
15
ஓசையுள் அடங்குமுன்னம் தாண்டவக்கோனே – மூல
ஓங்காரங் கண்டறிநீ தாண்டவக்கோனே
16
மூலப் பகுதியறத் தாண்டவக்கோனே – உள்ளம்
முளைத்தவேர் பிடுங்கேடா தாண்டவக்கோனே
17
சாலக் கடத்தியல்பு தாண்டவக்கோனே – மலச்
சாலென்றே தேர்ந்தறிநீ தாண்டவக்கோனே
18
பற்றே பிறப்புண்டார்க்கும் தாண்டவக்கோனே – அதைப்
பற்றாது அறுத்துவிடு தாண்டவக்கோனே
19
சற்றே பிரமத்திச்சை தாண்டவக்கோனே – உன்னுள்
சலியாமல் வைக்கவேண்டும் தாண்டவக்கோனே
20
அவித்தவித்து முளையாதே தாண்டவக்கோனே – பத்தி
அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே
21
செவிதனிற் கேளாத மறை தாண்டவக்கோனே – குரு
செப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே
22

கட்டளைக் கலித்துறை

மாடும் மனைகளும் மக்களுஞ் சுற்றமும் வான்பொருளும்
வீடும் மணிகளும் வெண்பொன்னுஞ் செம்பொன்னுஞ் வெண்கலமும்
காடும் கரைகளும் கல்லாம் பணியுங் கரிபரியும்
தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே. 23

நேரிசை வெண்பா

போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம்
மோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம் – தாகம்போம்
வேதமுதல் ஆகமங்கள் மேலானதென்று பல்கால்
ஓதுபிர மரத்துஉற்றக் கால். 24

தாண்டவராயக்கோனார் கூற்று

தாந் திமித்திமி தந்தக்கோ னாரே
தீந் திமித்திமி திந்தக்கோ னாரே
ஆனந்தக் கோனாரே – அருள்
ஆனந்தக் கோனாரே.

ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன்
அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்
மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் (தாந்)
25
அந்தக் கரணம் எனச்சொன்னால் ஆட்டையும்
அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும்
சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்
சாவாது இருந்திடக் கோட்டையுங் கட்டினேன் (தாந்)
26
மெய்வாய்கண் மூக்குச் செவியெனும் ஐந்தாட்டை
வீறுஞ் சுவையொளி ஊறோசை யாம்காட்டை
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே (தாந்)
27
பற்றிரண் டும்அறப் பண்புற்றேன் நண்புற்றேன்
பாலையும் உட்கொண்டேன் மேலையாம் கண்கண்டேன்
சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்
சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன் (தாந்)
28
அண்ணாக்கை யூடே யடைத்தே அமுதுண்ணேன்
அந்தரத் தரத்தை அப்பொழு தேயெண்ணேன்
விண்ணாளும் மொழியை மேவிப்பூசை பண்ணேன்
மெய்ஞ்ஞானம் ஒன்றுஅன்றி வேறேஒன்றை நண்ணேன் (தாந்)
29
மண்ணாதி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே
மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே
விண்ணாளி மொழியை மெய்யினுள் கொண்டேனே
மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே (தாந்)
30
வாக்காதி ஐந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே
நோக்கரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே
நுவலுமற்ற ஐந்தியோக நோக்கம் பரிந்தேனே (தாந்)
31
ஆறாதாரத் தெய் வங்களை நாடு
அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு
கூறான வட்ட ஆனந்தத்திற் கூடு
கோசமைந் துங்கண்டு குன்றேறி ஆடு (தாந்)
32
நாராயணக் கோனார் கூற்று

ஆதிபகவனையே ……பசுவே!
அன்பாய் நினைப்பாயேல்
சோதி பரகதிதான் ……பசுவே!
சொந்தமது ஆகாதோ?
33
எங்கும் நிறைபொருளைப் ……பசுவே!
எண்ணிப் பணிவாயேல்
தங்கும் பரகதியில் ……பசுவே!
சந்ததம் சாருவையே.
34
அல்லும் பகலும்நிதம் ……பசுவே!
ஆதி பதந்தேடில்
புல்லும் மோட்சநிலை ……பசுவே!
பூரணங் காண்பாயே.
35
ஒன்றைப் பிடித்தோர்க்கே ……பசுவே!
உண்மை வசப்படுமே
நின்ற நிலைதனிலே ……பசுவே!
நேர்மை அரிவாயே.
36
எல்லாம் இருந்தாலும் ……பசுவே!
ஈசர் அருள் இல்லையேல்
இல்லாத் தன்மையென்றே ……பசுவே!
எண்ணிப் பணிவாயே.
37
தேவன் உதவியின்றிப் ……பசுவே!
தேர்ந்திடில் வேறொன்றுமில்லை
ஆவிக்கும் ஆவியதாம் ……பசுவே!
அத்தன் திருவடியே.
38
தாயினும் அன்பன்அன்றோ ……பசுவே!
சத்திக்குள் ளானவன்தான்?
நேயம் உடையவர்பால் ……பசுவே!
நீங்காது இருப்பானே.
39
முத்திக்கு வித்தானோன் ……பசுவே!
மூலப் பொருளானோன்
சத்திக்கு உறவானோன் ……பசுவே!
தன்னைத் துதிப்பாயே.
40
ஐயன் திருபாதம் ……பசுவே!
அன்புற்று நீபணிந்தால்
வெய்ய வினைகளெல்லாம் ……பசுவே!
விட்டோ டும் கண்டாயே.
41
சந்திர சேகரன்தாள் ……பசுவே!
தாழ்ந்து பணிவாயேல்
இந்திரன் மான்முதலோர் ……பசுவே!
ஏவல் புரிவாரே.
42
கட்புலன் காணஒண்ணாப் ……பசுவே!
கர்த்தன் அடியிணையை
உட்புலன் கொண்டேத்திப் ……பசுவே!
உன்னதம் எய்வாயே.
43
சுட்டியும் காணஒண்ணாப் ……பசுவே!
சூனிய மானவத்தை
ஒட்டிப் பிடிப்பாயேல் ……பசுவே!
உன்னை நிகர்ப்பவர் யார்?
44
தன்மனந் தன்னாலே ……பசுவே!
தானுவைச் சாராதார்
வன்மரம் ஒப்பாகப் ……பசுவே!
வையத்துள் உரைவாரே
45
சொல்லெனும் நற்பொருளாம் ……பசுவே!
சோதியைப் போற்றாக்கால்
இல்லென்று முத்திநிலை ……பசுவே!
எப்பொ ருளுஞ்சொல்லுமே.
46

பலரோடு கிளத்தல்
(குறள் வெண்செந்துறை)

கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே. 47
மனம்வாக்குக் காயம்எனும் வாய்த்தபொறிக்கு எட்டாத
தினகரனை நெஞ்சமதில் சேவித்துப் போற்றீரே. 48
காலமூன் றுங்கடந்த கதிரொளியை உள்ளத்தால்
சாலமின்றிப் பற்றிச் சலிப்பறவே போற்றீரே. 49
பாலிற் சுவைபோலும் பழத்தில் மதுபோலும்
நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே. 50
மூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்
தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே. 51
தூய மறைப்பொருளைச் சுகவாரி நல்அமிழ்தை
நேய முடனாளும்நிலை பெறவே போற்றீரே. 52
சராசரத் தைத்தந்த தனிவான மூலம்என்னும்
பராபரத்தைப் பற்றப் பலமறவே போற்றீரே. 53
மண்ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக்
கண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே. 54
பொய்ப்பொருளை விட்டுப் புலமறிய ஒண்ணாத
மெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே. 55
எள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே. 56

நெஞ்சொடு கிளத்தல்

பூமியெல்லாம்ஓர் குடைக்கீழ்ப் பொருந்த அரசாளுதற்குக்
காமியம்வைத்தால் உனக்குக் கதியுளதோ கல்மனமே! 57
பெண்ணாசை யைக்கொண்டு பேணித் திரிந்தக்கால்
விண்ணாசை வைக்க விதியில்லையே கல்மனமே! 58
மேயும் பொறிகடமை மேலிடவொட் டார்க்குவினை
தேயும்என்றே நல்வழியில் சொல்லுகநீ கல்மனமே! 59
பொன்னிச்சை கொண்டு பூமிமுற்றும் திரிந்தால்
மன்னிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே! 60
பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கம் கொள்ளாமல்
மெய்யான ஞானக்கல்வியினை விரும்புவாய் கல்மனமே! 61
பேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து
நாய்நரிகள் போலலைந்தால் நன்மையுண்டோ கல்மனமே! 62
இரும்பைஇழுக் குங்காந்தத்து இயற்கைபோல் பல்பொருளை
விரும்பினதால் அவைநிலையோ? விளம்புவாய் கல்மனமே! 63
கற்பநிலை யால் அலவோகற்பக லங்கடத்தல்?
சொற்பநிலை மற்றநிலை சூட்சங்காண் கல்மனமே! 64
தேகம் இழப்பதற்குச் செபஞ்செய்தேன் தவஞ்செய்தேன்?
யோகமட்டுஞ் செய்தால்என்? யோசிப்பாய் கல்மனமே! 65
பேசாது இருப்பதற்குத்தான் கற்ற கல்வியன்றோ
வாகான மெய்க்கல்வி? வகுத்தறிநீ கல்மனமே! 66

அறிவோடு கிளத்தல்

எல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த
வல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே. 67
கட்புலனுக்கு எள்ளளவும் காணாது இருந்தெங்கும்
உட்புலனாய் நின்றஒன்றை உய்த்தறிநீ புல்லறிவே. 68
விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும்
செழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்தறிநீ புல்லறிவே. 69
மெய்யில்ஒரு மெய்யாகி மேலாகிக் காலாகிப்
பொய்யில்ஒரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே. 70
ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே
கூத்துபுரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே. 71
இருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை
அருள்துறையில் நிறுத்தி விளக்காகுநீ புல்லறிவே. 72
நல்வழியில் சென்று நம்பதவி எய்தாமல்
கொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே. 73
கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல்
மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே. 74
வாசிக்கு மேலான வாள்கதியுன் னுள்ளிருக்க
யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே. 75
அன்னையைப்போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே. 76

சித்தத்தொடு கிளத்தல்

கண்ணிகள்

அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீபற – பர
மானந்தம் கண்டோ ம் என்று தும்பீபற!
மெய்ஞ்ஞானம் வாய்த்தென்று தும்பீபற – பர
மேலேறிக் கொண்டோ ம் என்று தும்பீபற!
77
அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற – நிறை
ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீபற!
தொல்லைவினை நீங்கிற்று என்றே தும்பீபற – பரஞ்
சோதியைக் கண்டோ ம் எனத் தும்பீபற!
78
ஐம்பொறி அடங்கினவே தும்பீபற – நிறை
அறிவே பொருளாம் எனத் தும்பீபற!
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற – ஒரு
தெய்வீகம் கண்டோ ம் என்றே தும்பீபற!
79
மூவாசை விட்டோ மென்றே தும்பீபற – பர
முத்தி நிலை சித்தியென்றே தும்பீபற!
தேவாசை வைத்தோமென்று தும்பீபற – இந்தச்
செகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற!
80
பாழ்வெளியை நோக்கியே தும்பீபற – மாயைப்
பற்றற்றோம் என்றேநீ தும்பீபற!
வாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற – நிறை
வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற!
81
எப்பொருளும் கனவென்றே தும்பீபற – உல
கெல்லாம் அழியுமென்றே தும்பீபற!
அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற – என்றும்
அழிவில்லாதது ஆதியென்றே தும்பீபற!
82

குயிலொடு கிளத்தல்

கரணங்கள் ஒருநான்கும் அடங்கினவே – கெட்ட
காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே;
சரணங்கள் ஒருநான்கும் கண்டனமென்றே – நிறை
சந்தோட மாகவே கூவு குயிலே!
83
உலகம் ஒக்காளமாம் என்றோதுகுயிலே – எங்கள்
உத்தமனைக் காண்பதரிதென்று ஓதுகுயிலே!
பலமதம் பொய்மையே என்றோதுகுயிலே – எழு
பவம் அகன்றிட்டோ ம் நாமென்று ஓதுகுயிலே!
84
சாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே – எல்லாத்
தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார்குயிலே!
மாதவங்கள் போலும்பலன் வாயாக்குயிலே – மூல
மந்திரங்கள் தான்மகிமை வாய்க்கும்குயிலே.
85
எட்டிரண்டு அறிந்தோர்க்குஇடர் இல்லைகுயிலே – மனம்
ஏகாமல் நிற்கில்கதி எய்துங்குயிலே!
நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளு குயிலே – ஆதி
நாயகனை நினைவில் வைத்தோதுகுயிலே.
86

மயிலொடு கிளத்தல்

ஆடுமயிலே நடமாடு மயிலே எங்கள்
ஆதியணி சேடனைக் கண்டாடுமயிலே!
கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே – என்றும்
குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே.
87
இல்லறமே அல்லலாமென்று ஆடுமயிலே – பத்தி
இல்லவர்க்கு முத்திசித்தி இல்லைமயிலே!
நல்லறமே துறவறங் காணுமயிலே – சுத்த
நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே.
88
காற்றூனைப் போல்மனத்தைக் காட்டுமயிலே – வரும்
காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே!
பாற்றூடு உருவவே பாயுமயிலே – அகப்
பற்றுச் சற்றுமில்லாமற் பண்ணுமயிலே.
89

அன்னத்தொடு கிளத்தல்

சிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தின் நிழல்மறையும்
மறுவாயைத் தான்கலக்கின் மதிமயங்கும் மடவனமே. 90
காற்றின் மரமுறியும் காட்சியைப்போல் நல்லறிவு
தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம் மடவனமே. 91
அக்கினியாற் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல்
பக்குவநல் அறிவாலே பாவம்போம் மடவனமே. 92
குளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல்போல்
வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே. 93
அப்புடனே உப்புச் சேர்ந்தளவுசரி யானதுபோல்
ஒப்புறவே பிரமமுடன் ஒன்றிநில்லு மடவனமே. 94
காய்ந்த இரும்புநிறங் காட்டுதல்போல் ஆத்துமத்தை
வாய்ந்திலங்கச் செய்து வளம்பெறுநீ மடவனமே. 95

புல்லாங்குழலூதல்

தொல்லைப் பிறவி தொலைத்தக்கார்க்கு முத்திதான்
இல்லையென்று ஊதுகுழல் – கோனே
இல்லையென்று ஊதுகுழல்.
96
இந்திர போகங்கள் எய்தினுந் தொல்லையென்று
அந்தமாய் ஊதுகுழல் – கோனே
அந்தமாய் ஊதுகுழல்.
97
மோன நிலையில் முத்திஉண்டாம் என்றே
கானமாய் ஊதுகுழல் – கோனே
கானமாய் ஊதுகுழல்.
98
நாய்போற் பொறிகளை நானாவி தம்விட்டோ ர்
பேயரென்று ஊதுகுழல் – கோனே
பேயரென்று ஊதுகுழல்.
99
ஓடித் திரிவோர்க்கு உணர்வுகிட் டும்படி
சாடியே ஊதுகுழல் – கோனே
சாடியே ஊதுகுழல்.
100
ஆட்டுக் கூட்டங்களை அண்டும் புலிகளை
ஓட்டியே ஊதுகுழல் – கோனே
ஓட்டியே ஊதுகுழல்.
101
மட்டிக் குணமுள்ள மாரீச நாய்களைக்
கட்டிவைத்து ஊதுகுழல் – கோனே
கட்டிவைத்து ஊதுகுழல்.
102
கட்டாத நாயெல்லாம் காவலுக் கெப்போதும்
கிட்டாவென்று ஊதுகுழல் – கோனே
கிட்டாவென்று ஊதுகுழல்.
103
பெட்டியிற் பாம்பெனப் பேய்மனமே அடங்க
ஒட்டியே ஊதுகுழல் – கோனே
ஒட்டியே ஊதுகுழல்.
104
எனதென்றும் யானென்றும் இல்லா திருக்கவே
தனதாக ஊதுகுழல் – கோனே
தனதாக ஊதுகுழல்.
105
அற்ற விடமொன்றே அற்றதோடு உற்றதைக்
கற்றதென்று ஊதுகுழல் – கோனே
கற்றதென்று ஊதுகுழல்.
106

பால் கறத்தல்

சாவாது இருந்திட பால்கற – சிரம்
தன்னில் இருந்திடும் பால்கற
வேவாது இருந்திட பால்கற – வெறு
வெட்ட வெளிக்குள்ளே பால்கற.
107
தோயாது இருந்திடும் பால்கற
தொல்லை வினையறப் பால்கற
வாயால் உமிழ்ந்திடும் பால்கற – வெறும்
வயிறார உண்டிடப் பால்கற.
108
நாறா திருந்திடும் பால்கற
நாளும் இருந்திடப் பால்கற
மாறாது ஒழுகிடும் பால்கற – தலை
மண்டையில் வளரும் பால்கற.
109
உலகம் வெறுத்திடும் பால்கற – மிக
ஒக்காளம் ஆகிய பால்கற
கலசத்தினுள் விழப் பால்கற – நிறை
கண்டத்தின் உள்விழப் பால்கற.
110
ஏப்பம் விடாமலே பால்கற – வரும்
ஏமன் விலக்கவே பால்கற
தீப்பொறி ஓய்ந்திடப் பால்கற – பர
சிவத்துடன் சாரவே பால்கற.
111
அண்ணாவின் மேல்வரும் பால்கற – பேர்
அண்டத்தில் ஊறிடும் பால்கற
விண்ணாட்டில் இல்லாத பால்கற – தொல்லை
வேதனை கெடவே பால்கற. 112

கிடை கட்டுதல்

இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே – உன்
அடங்குமன மாடொன்றை அடக்கிவிடு கோனே. 113
சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் – நாளும்
தவமாகக் கழிப்பவரே சன்னமதில் வருவார். 114
அகங்கார மாடுகள்மூன்று அகற்றிவிடு கோனே – நாளும்
அவத்தையெனும் மாடதைநீ அடக்கிவிடு கோனே. 115
ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டு கோனே! – உன்
உறையுமிரு மலந்தனையும் ஓட்டிக் கட்டுக் கோனே. 116
மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுக் கோனே – மிக
முக்கால நேர்மையெல்லாம் முன்பறிவாய் கோனே. 117
இந்திரியத் திரயங்களை இறுக்கிவிடு கோனே – என்றும்
இல்லை என்றேமரணக்குழல் எடுத்து ஊதுகோனே. 118
உபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே! – உனக்
குள்ளிருக்கும் கள்ளமெல்லாம் ஓடிப்போம் கோனே. 119
முக்காய மாடுகளை முன்னங்கட்டுக் கோனே – இனி
மோசமில்லை நாசமில்லை முத்திஉண்டாங் கோனே. 120
கன்மமல மாடுகளைக் கடைக்கட்டுக் கோனே – மற்றக்
கன்மத்திர யப்பசுவைக் கடையிற்கட்டுக் கோனே. 121
காரணக்கோ மூன்றையுங் கால்பிணிப்பாய் கோனே – நல்ல
கைவசமாய் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே. 122
பிரம்மாந்திரத்திற்பே ரொளிகாண் எங்கள்கோனே – முத்தி
பேசாதிருந்து பெருநிட்டைசார் எங்கள் கோனே. 123
சிரமதிற் கமலச் சேவைதெரிந் தெங்கள்கோனே – வாய்
சித்திக்குந் தந்திரம் சித்தத்தறியெங்கள் கோனே. 124
விண்நாடி வத்துவை மெய்யறிவிற் காணுங்கோனே – என்றும்
மெய்யே மெய்யில்கொண்டு மெய்யறிவில் செல்லுங்கோனே. 125
கண்ணாடியின் உள்ளே கண்டுபார்த்துக் கொள்ளுகோனே – ஞானக்
கண்ணன்றிக் கண்ணடிகாண ஒண்ணாதெங்கள் கோனே. 126
சூனியமானத்தைச் சுட்டுவார் எங்குண்டு கோனே – புத்தி
சூக்குமமேயதைச் சுட்டுமென்று எண்ணங்கொள் கோனே. 127
நித்தியமானது நேர்படி லேநிலை கோனே! – என்றும்
நிற்குமென்றே கண்டு நிச்சயங்காணெங்கள் கோனே. 128
சத்தியும் பரமும் தன்னுட் கலந்தேகோனே – நிட்டை
சாதிக்கில் இரண்டுந்தன்னுள்ளே காணலாங் கோனே. 129
கூகைபோல் இருந்து மோனத்தைச்சாதியெங் கோனே – பர
மூலநிலைகண்டு மூட்டுப் பிறப்பறு கோனே. 130


  1. வயங்கும் – விளங்கும்
  2. சகளம் – உருவுள்ளது; நிட்களம் – உருவமில்லாதது
  3. நாரி இடப்பாகன் – அர்த்தநாரீஸ்வரன்
  4. முப்பாழ் – விந்து, மோகினி, மான் ஆகிய மூன்று மாயை
  5. போக்கியம் – அனுபவம்
  6. கோசம் – கருப்பை
  7. அத்தன் – தந்தை
  8. மூவர் முதல் – மும்மூர்த்திகளின் தலைவன்
  9. சுகவாரி – இன்பக்கடல்
  10. சராசரம் – உலகம்; பவம் – பிறப்பு
  11. காமியம் – விருப்பம்
  12. கால் – காற்று
  13. மூவாசை – மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை;
    தேவாசை – கடவுள் மீது கொள்ளும் ஆசை
  14. அப்பு – நீர்
  15. வாயா – வாய்க்காது
  16. நட்டணை – நடிப்பு
  17. தற்பரம் – பரம்பொருள்
  18. நிட்டை – சிவயோகம்