Kaduveli Sithar

கடுவெளிச் சித்தர் – ஆனந்தக் களிப்பு

பல்லவி

பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சரணங்கள்

சாபம் கொடுத்திட லாமோ ? – விதி
தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?
கோபந் தொடுத்திடலாமோ ? – இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? 1

சொல்லருஞ் சூதுபொய் மோசம் – செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசு வாசம் – எந்த
நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 2

நீர்மேற் குமிழியிக் காயம் – இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் – சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3

நந்த வனத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4

தூடண மாகச்சொல் லாதே – தேடுஞ்
சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
ஏடாணை மூன்றும் பொல்லாதே – சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே. 5

நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. 6

நல்லவர் தம்மைத் தள்ளாதே – அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே – கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7

வேத விதிப்படி நில்லு – நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு – பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8

பிச்சையென் றொன்றுங்கே ளாதே – எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே – சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9

மெஞ்ஞானப் பாதையி லேறு – சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு – உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10

மெய்குரு சொற்கட வாதே – நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே – நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே. 11

கூடவருவ தொன்றில்லை – புழுக்
கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை – அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு – இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு – அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13

உள்ளாக நால்வகைக் கோட்டை – பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை – வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14

காசிக்கோ டில்வினை போமோ – அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? – பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15

பொய்யாகப் பாராட்டுங் கோலம் – எல்லாம்
போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
மெய்யாக வேசுத்த காலம் – பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 16

சந்தேக மில்லாத தங்கம் – அதைச்
சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
அந்த மில்லாதவோர் துங்கம் – எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17

பாரி லுயர்ந்தது பக்தி – அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி – யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18

அன்பெனும் நன்மலர் தூவிப் – பர
மானந்தத் தேவியின் அடியிணை மேவி
இன்பொடும் உன்னுட லாவி – நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19

ஆற்றும் வீடேற்றங் கண்டு – அதற்
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு – ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20

ஆன்மாவால் ஆடிடு மாட்டம் – தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் – நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21

எட்டுமி ரண்டையும் ஓர்ந்து – மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22

இந்த வுலகமு முள்ளு – சற்றும்
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு – உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23

பொய்வேதந் தன்னைப் பாராதே – அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே – துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24

வைதோரைக் கூடவை யாதே: – இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25

சிவமன்றி வேறே வேண்டாதே – யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே – நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26

பாம்பினைப் பற்றியாட் டாதே – உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே – உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27

போற்றுஞ் சடங்கை நண்ணாதே – உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே – பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28

கஞ்சாப் புகைபிடி யாதே – வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே – பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29

பத்தி யெனுமேணி நாட்டித் – தொந்த
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி – நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30

செப்பரும் பலவித மோகம் – எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் – நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31

எவ்வகை யாகநன் னீதி – அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி – யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32

கள்ள வேடம் புனையாதே – பல
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே – நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33

எங்கும் சுயபிர காசன் – அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் – தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34

(முடிந்தது)