சிவாலயங்கள்
சிவாலயங்கள் என்பவை சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை மூலமுதல்வராக கொண்டு அமைந்துள்ள கோயில்களாகும்.
இந்தியாவில் மிக அதிக அளவில் சிவாலயங்கள் அமைந்திருந்தாலும், இலங்கை, நேபாளம், கம்போடியா என பல உலக நாடுகளிலும் சிவாலயங்கள் அமைந்துள்ளன.
பெரும் பாலானான சிவாலயங்களில் மூலவராக சிவலிங்கமும், பிரகாரங்களில் பிற தெய்வ சன்னதிகளும் உள்ளன.
வேறு பெயர்கள்
சிவாலயம் – சிவ + ஆலயம்[2]
சிவப்பதிகள் – சிவ + பதிகள் –
சிவத் தலங்கள்
சிவன் கோயில்கள்
தேவகிருதம்,
தேவாகாரம்,
தேவாயதனம்,
தேவாலயம்,
தேவகுலம்,
தேவமந்திரம்,
தேவபவனம்,
தேவஸ்தானம்,
தேவவேஸ்மம்,
சைத்தியம்,
சேத்திரம்
என இறைவனின் இடம் என்று பொருள் தரும் பலவகைப் பெயர்களும் சிவாலயங்களுக்கு வழங்கப்படுகின்றன.
சிவாலய வகைகள்
சிவாலயங்களை மூலவரின் சிறப்பு, தலவரலாறு, தலத்தின் மீது பாடப்பட்ட பாடல்கள் என பலவற்றினை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்துகின்றனர்.
சிவாலய வழிபாட்டு முறை
சிவாலயங்களின் கோபுரத்தினை கடந்து சென்றதும், அங்கிருக்கும் கொடி மரத்தினை வணங்க வேண்டும். அதன் அருகே இருக்கும் பலிபீடத்தினை வணங்கி, அதில் தீய எண்ணங்களை பலியிடுவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கன்னி விநாயகரை வணங்க வேண்டும். தோப்புக்கரணமும், தலையில் குட்டியும் வணக்கம் செய்யலாம்.
விநாயகப் பெருமானை வணங்கிய பின்பு நந்தி தேவரிடம் சென்று மூலவரை தரிசிக்க அனுமதி தர வேண்ட வேண்டும். அதன் பிறகு மூலவரையும், அம்பாளையும் வணங்க வேண்டும். பின்பு கோஷ்டத்தில் உள்ள நடராஜர், திருமால்,பிரம்மா போன்றோரை வணங்க வேண்டும்.
பரிவார தேவதைகளான வள்ளி தெய்வானை, முருகன், நடராஜர் மற்றும் இதர தெய்வங்களை வணங்கி, கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை வணங்கும் போது சண்டிகேசுவரை சிவாலயத்தில் எவ்வித பொருட்களையும் எடுத்து செல்லவில்லையென கூறி வணங்க வேண்டும்.
பின்பு நவக்கிரகங்களுக்கு வணக்கம் செய்து பைரவர், சூரிய சந்திரர்களை வணங்கி அனைத்து தெய்வங்களையும் வணங்கியபின்பு கொடிமரத்தில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்து பின் வீட்டிற்கு செல்வது பக்தர்களுக்கு நலம் அளிக்கும்.